அயோ.. வேட்பாளர் நான் இல்லை, அம்மாதான்.... அலறும் தம்பிதுரை!
கரூர்: கரூர் தொகுதியில் மக்களிடம் வாக்கு கேட்க செல்லும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, பொது மக்களிடம் நான் வேட்பாளர் இல்லை, அம்மாதான் வேட்பாளர் என்று கூறி வித்தியாசமாக பிரசாரம் செய்து வருகிறார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 24 ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால் , அதற்கு முன்பே, தமிழகத்தில் அதிமுக தனது தேர்தல் யுத்தியை வகுத்து செயல்படுத்திக் கொண்டு இருந்தது.

தம்பி வழி தனி வழி...
இந்த நிலையில், மத்திய மண்டலமான கரூரில் அதிமுக சார்பில், அக் கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளரும், தற்போதையை கரூர் எம்.பியுமான தம்பிதுரையே மீண்டும் போட்டியிடுகிறார்.

திமுகவிலிருந்து சின்னச்சாமி
தம்பிதுரைக்கும், கரூர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான செந்தில் பாலாஜி இருவருக்கும் பைட் கொடுக்கும் வகையில், திமுக சார்பில் விவசாய அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சின்னசாமியை களம் இறக்கியுள்ளனர்.

சபாஷ் சரியான போட்டி
சபாஷ் சரியான போட்டி ..... என கரூர் தொகுதி மக்களே பட்டி மன்றம் வைக்கும் அளவு இப்போது போட்டி கடுமையாகி விட்டது.

சென்டிமென்ட் தம்பிதுரை
இந்த நிலையில் தான், அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் , சென்டி மெண்டாக, கரூர் தொகுதிக்கு உட்பட்ட கோடங்கிபட்டியில் , கூட்டணி கட்சி நிர்வாகிகளை அழைத்து அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.

ஆனால் திடீர் எதிர்ப்பு வந்ததே
ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 7.30 மணியளவில் வானதிரையான்பட்டி கிராமத்தில் தம்பிதுரை பிரச்சாரம் செய்ய சென்ற போது கிராம மக்கள் ‘கடந்த 5 வருடத்தில் எங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. இங்கு ஓட்டு கேட்டு நீங்கள் ஊருக்குள் வரக் கூடாது என்று மல்லு கட்டினர்.

வாக்குவாதம்- கைகலப்பு - மண்டை உடைப்பு
இதனால் தம்பிதுரையுடன் வந்த அதிமுகவினருக்கும், ஊர் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய குழு தலைவர் சுப்பையாவின் மகன் சக்திவேல் என்பவரது மண்டை உடைந்தது. இதனால், தம்பிதுரை பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்ற சம்பமும் நடைபெற்றது. மேலும், இது போன்று பல ஊர்களிலும் தம்பிதுரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருவதால், அதிமுக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ரைட் விடு.. அம்மாதாய்யா வேட்பாளர்
இந்த நிலையில், தனக்கு வரும் எதிர்ப்புகளை சமாளிக்க, தம்பிதுரை ரகசிய யுக்தி வகுத்துள்ளார். அது என்ன வென்றால், இந்த தொகுதியில் வேட்பாளராக நான் நிற்கவில்லை. அம்மா (முதல்வர் ஜெயலலிதா) தான் வேட்பாளர். எனவே, அம்மாவை பிரதமர் ஆக்க அதிமுகவை வெற்றிபெற வையுங்கள் என மக்கள் மனதை டச் செய்யும் வகையில் பிரச்சாரத்தை மாற்றி அமைத்துள்ளார்.

இந்த டீல் நல்லாருக்கே...
இவரது இந்த பேச்சுக்கு மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்ததும், இதையே தனது பாணியாக்கி வாக்கு வேட்டை நடத்தி வருகின்றார்.
எப்படியோ மண்டை உடையாம தப்பிச்சு கரை சேர்ந்தால் போதும்....












Click it and Unblock the Notifications