குவைத்தில் இந்தியருக்கு மரண தண்டனை விதிப்பு
சென்னை: குவைத்தில் இந்தியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரின் விவரங்களை தெரிவிக்க இந்திய தூதரகம் மறுத்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஹ்யூபர்ட்சன் டாம்வில்சன் என்பவர் குவைத் நாட்டு சிறைகளில் வாடும் இந்தியர்களின் விவரங்களை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி மனு அளித்தார்.
அவருக்கு இந்திய தூதரகம் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது,
குவைத் சிறைகளில் இருக்கும் இந்தியர்களின் பெயர், பாஸ்போர்ட் எண், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை அளிக்க முடியாது. குவைத் அதிகாரிகள் அளித்த தகவலின்படி மத்திய சிறையில் உள்ள ஒரு இந்தியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காதீர் காலீஜா என்ற இந்தியருக்கு 2001ம் ஆண்டு ஜூன் மாதமும், ஷகருல்லா அன்சாரி என்பவருக்கு கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதமும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் இருந்து இதுவரை இந்த 2 இந்தியர்களுக்கு தான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
குவைத் மத்திய சிறையில் ஆண், பெண் உள்பட 218 இந்தியர்கள் உள்ளனர். அதில் 30 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். விசா காலம் முடிந்தும் இருப்பவர்களை குவைத் அதிகாரிகள் பிடித்து அவரவர் நாடுகளுக்கு அனுப்பி விடுகிறார்கள்.
மத்திய சிறையில் உள்ள இந்தியர்களில் 6 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.