அன்புமணியின் முதல்நாள் முதல் கையெழுத்து தெரியும்... 7 வது 2 கையெழுத்துக்கள் எதுக்கு தெரியுமா?
சென்னை: சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மே 20ம் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக கூறும் பாமகவின் அன்புமணி ராமதாஸ், முதல்நாள் முதல் கையெழுத்து மதுவிலக்கு அமல்படுத்துவதற்கு போடப்போகிறாராம். அதேபோல 7வது நாள் 2 முக்கிய திட்டங்களுக்குக் கையெழுத்து போடுவேன் என்றும் அறிவித்துள்ளார்.
முதல்வராக பதவியேற்பது போல விளம்பரம் செய்து வரும் அன்புமணி ராமதாஸ், தனது பிரச்சாரத்திலும், அதீத நம்பிக்கையுடனேயே பிரச்சாரம் செய்து வருகிறார். கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 41 பாமக வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் சிதம்பரம் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் ஆளுங்கட்சியான அதிமுகவையும், பிரதான எதிர்கட்சியான, திமுக, தேமுதிகவையும் விமர்சனம் செய்தார்.

முதல்வரான உடன் கையெழுத்து
பா.ம.க. ஆட்சியில் முன்னோடி மாவட்டமாக, தர்மபுரி மாறும் என்று கூறும் அன்புமணி, நான் முதல்வரான உடன், முதல் கையெழுத்து மதுவிலக்கு தான். இதில், எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

7வது நாள் 2 கையெழுத்து
அதேபோல, ஏழாவது நாளில், நான் போடப்போகும் இரண்டு கையெழுத்துகள் முக்கியமானவை என்று கூறிய அன்புமணி, ஒன்று தர்மபுரி, 'சிப்காட்' தொழிற்பேட்டைக்கானது. இன்னொன்று, தென் பெண்ணையாற்றின் உபரிநீரை இணைப்பு கால்வாய்த் திட்டம் மூலம் ஏரிகளை நிரப்புவது என்று தெரிவித்துள்ளார்.

கருணாநிதி மன்னிப்பு
மதுவை குடிப்பதற்கு பதிலாக விஷத்தை குடிக்கலாம் என திருவாரூரில் கருணாநிதி பேசியுள்ளார். 1971இல் ராஜாஜி வலியுறுத்தியதையும் மீறி மதுக்கடைகளை திறந்ததை மறந்துவிட்டு பேசுகிறாரா கருணாநிதி? மூன்று தலைமுறைகளை நாசமாக்கிய அவருக்கு மதுஒழிப்பு பற்றி பேச தகுதி கிடையாது. மதுவை கொண்டு வந்ததற்கு முதலில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மதுவிலக்கு
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தற்போது மதுவிலக்கு கொண்டு வருவோம் எனக் கூறுவதே, பாமகவின் முதல் வெற்றி. கடந்த 5 ஆண்டுகளில் செய்யாத ஜெயலலிதா, தற்போது படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என்கிறார். அதை யாரும் நம்ப மாட்டார்கள். மதுவிலக்கை அன்புமணியால் மட்டும்தான் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

தமிழகத்தை காப்பாற்ற முடியாது
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். இல்லையெனில் கடவுளே வந்தாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது.
தமிழகத்தில் புரட்சி, புரட்சி எனக் கூறி சிலர் ஏமாற்றி வருகிறார்கள். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், நல்ல கல்வி, வேளாண்மையை கொடுப்பதும்தான் உண்மையான புரட்சி.

ஜெயலலிதாவிற்கு என்ன தைரியம்
கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரும் பேசுவதைக் கேட்டு மக்களுக்கு வெறுப்பாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக லஞ்சம், ஊழல் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடுதான் என தொழிலதிபர்கள் மத்தியிலான் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தை பார்வையிட வராத ஜெயலலிதா எந்த தைரியத்தில் வாக்கு கேட்டு வருகிறார்?

வேளாண்மைக்கு அமைச்சர்கள்
பாமக ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் போடப்படும். 3 அமைச்சர்கள் வேளாண்துறைக்கு நியமிக்கப்படுவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். கவுன்சிலிங் மூலம் பணிமாற்றம் செய்யப்படுவர் என்று கூறியுள்ளார் அன்புமணி.












Click it and Unblock the Notifications