கல்வியில் 28, சுகாதாரத்தில் 26.. டாஸ்மாக் விற்பனையில் 2... விஜயகாந்த் மாதிரியே பேசும் அன்புமணி!
தர்மபுரி: இதுவரை அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 6500 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட லட்சணத்தில் ஆட்சி நடத்தும் ஜெயலலிதா, எப்படி பிரதமர் ஆக முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாமகவின் தர்மபுரி வேட்பாளரும், கட்சியின் இளைஞர் அணித் தலைவரும், டாக்டர் ராமதாஸின் மகனுமான அன்புமணி ராமதாஸ்.
தர்மபுரியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகையில்தான் இப்படித் தெரிவித்தார் அன்புமணி ராமதாஸ்.
கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது....

இது வெற்றிக்கூட்டணி
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு வெற்றிக்கூட்டணியை உருவாக்கி உள்ளோம். இந்த தேசிய ஜனநாயக கூட்டணியை உடைக்க வேண்டும் என்று பலர் முயற்சித்தனர். அவர்களின் முயற்சி பலிக்காது.

ஒரே பிரதமர் வேட்பாளர் மோடிதான்
இந்தியாவின் ஒரே பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தான். மற்ற கட்சிகளின் தலைவர்கள் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை தெரிவிக்கவில்லை.

ஜெ. கனவு பலிக்காது
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராகும் கனவு பலிக்காது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிப்பெறும் என்று அவர்கள் பகல் கனவு காண்கிறார்கள். தமிழக மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு அளிக்க தயாராகி விட்டார்கள்.

இதுவரை 6500 கொலைகள்
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் இதுவரை 6 ஆயிரத்து 500 கொலைகள் நடந்துள்ளது. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

எல்லாம் போச்சு
கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளும் செயல் இழந்து விட்டது.

நான் கொண்டு வந்ததுதான் 108 ஆம்புலன்ஸ் திட்டம்
நான் அமைச்சராக இருந்த போது, தேசிய கிராமப்புற சுகாதாரத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதே போன்று 108 ஆம்புலன்சு திட்டத்தை நாங்கள் தான் கொண்டு வந்தோம். இதுபோன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய பாமகவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

கல்வியில் 28.. சுகாதாரத்தில் 26.. வேலைவாய்ப்பில் 30
தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் கல்வித்துறையில் 28-வது இடத்திலும், சுகாதாரத்துறையில் 26-வது இடத்திலும், வேலைவாய்ப்பில் 30-வது இடத்திலும் உள்ளது.

ஆனால் டாஸ்மாக் விற்பனையில் 2வது இடம்
ஆனால் டாஸ்மாக் விற்பனையில் 2-வது இடத்தில் உள்ளது. இந்த நிலை மாறவேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து துறைகளும் முன்னேற்ற நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என்றார் அன்புமணி ராமதாஸ்.












Click it and Unblock the Notifications