எந்திரிக்க முடியலை... நடக்க முடியலை... நிக்க முடியல... நான் ஓடுவேன்: அன்புமணி சீண்டுவது யாரை?
சென்னை: தமிழ்நாட்டில் இப்போதைக்கு நான்கு முதல்வர் வேட்பாளர்கள், ஒருவர் எழுந்திருக்க முடியாதவர், இன்னொருவர் நடக்க முடியாதவர், மற்றொருவர் நிற்க முடியாதவர், கடைசியாக நான், மராத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு ஓடுபவன் என்று பாமகவில் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். படித்தவர்களுக்கு இப்போது வாய்ப்பு கொடுங்கள். தமிழகத்துக்கு மாற்றும் வர வேண்டும் எனில் அதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள்தான் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தை ஆட்சி செய்ய எங்களுக்கு 5 ஆண்டுகள் மட்டும் கொடுங்கள் போதும், 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை நிறைவேற்றுவோம்.திமுக, அதிமுக ஆட்சி செய்ய 50 ஆண்டுகள் வாய்ப்பு வழங்கியும் எந்த வளர்ச்சியும் இல்லை. இரு கட்சிகளும் தோல்வியடைந்துவிட்டன என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் உங்கள் அன்புமணி
உங்கள் ஊரில் உங்கள் அன்புமணி என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தி வருகிறார் பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், மதுரையில் பேசும் போது மக்களை அதிகம் பாதிக்கும் இரண்டு விஷயங்கள் மது மற்றும் ஊழல். திமுக, அதிமுகவால் இந்த இரண்டையும் ஒழிக்க முடியாது. இந்த முறை ஆட்சியை பிடிக்க பிரிட்ஜ், வாஷிங்மெஷின் கொடுக்க உள்ளனர். மீண்டும் ஒருமுறை ஏமாற வேண்டாம் என்றார்.
முதல்வரை பார்க்க முடியவில்லை
மத்திய அமைச்சர் ஒருவர், கடந்த 2 ஆண்டுகளாக தமிழக முதல்வரை பார்க்க முடியவில்லை, தொடர்பு கொள்ள முடியவில்லை என்கிறார். இது தமிழகம் எந்தநிலையில் இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை
நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, மதுரை தோப்பூரில் 100 ஏக்கரில் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனையைக் கொண்டுவர முதற்கட்டமாக ரூ.150 கோடி நிதி ஒதுக்கி, அடிக்கல்லும் நாட்டினேன். ஆட்சியாளர்களின் மெத்தனத்தால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றார்.
வாய்ப்பு கொடுங்கள்
திருச்சியில் பேசிய அன்புமணி, தமிழகத்தில் அனைத்து குடும்பங்களையும் பாதிக்கும் பிரச்னைகள் இரண்டு, ஊழலும் மதுவும் தமிழகத்தில் உள்ள தமிழகத்தில் உள்ள 1 கோடியே 97 லட்சம் குடும்பங்களையும் பாதித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளால் தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
படித்தவர்களுக்கு வாய்ப்பு
மதுவை ஒழித்தால்தான் தமிழகம் முன்னேறும். எனவே எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். இதுவரை நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள், 50 வருடம் அவர்கள் ஆண்டது போதும், ஏன் ஒரு டாக்டருக்கு, படித்தவருக்கு, இன்ஜினியருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாமா. எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஆக்டருக்கு வாய்ப்பு கொடுத்தீங்க, இப்போது டாக்டருக்கு வாய்ப்பு கொடுங்கள். சினிமாவில் நல்லது செய்தால் ரசிக்கும் நீங்கள், நிஜத்தில் ஒத்துழைக்க மறுக்கிறீர்கள்.
முதல்வர் வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் இப்போதைக்கு நான்கு முதல்வர் வேட்பாளர்கள், ஒருவர் எழுந்திருக்க முடியாதவர், இன்னொருவர் நடக்க முடியாதவர், மற்றொருவர் நிற்க முடியாதவர், கடைசியாக நான், மராத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு ஓடுபவன்.
உங்களைத் தேடி வருவேன்
உடலுக்கு முடியாமல் தங்கள் அத்தியாவசிய வேலைகளையே செய்ய முடியாதவர்கள். மக்களின் வேலைகளை, மக்களுக்கு ஊழியம் எப்படி செய்வார்கள். நான் உங்களை தேடி வருவேன். உங்களின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்பதை உறுதியுடன் கூறுகிறேன்.
கலவரம் வரவில்லை
தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகள் வாக்குறுதிகள் மட்டும் கொடுத்தார்கள். ஆனால் எந்த வித முக்கியத்துவமும் அளிக்கவில்லை. நான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தருமபுரியில் எந்த மோதலும் நடக்கவில்லை. எங்கள் தலைவர்கள் பேச்சில் மாற்றம் வந்திருப்பதை உங்களால் காண முடியும். சாதி-மதங்களுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறேன். நான் முன்னேற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்கிறேன் என்றும் அன்புமணி பேசியுள்ளார்.