மும்பை "இயக்குநர்களின்" இயக்கத்தில் நடித்து வரும் மு.க.ஸ்டாலின்... அன்புமணி தாக்கு
சீர்காழி: மும்பையைச் சேர்ந்த 2 பேர் இயக்க, அவர்கள் சொல்படி கேட்டு நடித்துக் கொண்டிருக்கிறார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். இதுதான் அவரது நமக்கு நாமே பயணத்தின் ரகசியம் என்று பாமக இளைஞர் அணித் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான டாக்டர் அன்புமணி கூறியுள்ளார்.
சீர்காழியில் நடந்த பாமக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் அன்புமணி கூறியதாவது:
நாங்கள் 2016ல் ஆட்சி அமைத்தால் போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கிற்கான கையெழுத்துதான். திமுக மதுவை அறிமுகப்படுத்தி 3 தலைமுறைகளை அழித்து விட்டது. அதன்பிறகு வந்த அதிமுகவும் வீதிதோறும் மதுக்கடைகளை திறந்து மதுவை திணித்து வருகிறது. இரு கட்சிகளும் தமிழகத்தை வீணடித்து விட்டனர்.

பாமக ஆட்சியில் இலவசங்கள் தரமாட்டோம். அதற்கு பதிலாக இலவச கல்வி, இலவச சுகாதாரத்தினை தருவோம். பொதுமக்கள் தற்போது கல்விக்கும், சுகாதாரத்திற்கும் தான் அதிகம் செலவு செய்கின்றனர். இதனை எங்களது ஆட்சியில் இலவசமாக அளிப்பதன் மூலம் 5 வருடங்களில் பொதுமக்கள் 5 லட்சத்திற்கு மேல் மிச்சம் செய்யமுடியும். வரைவு தேர்தல் அறிக்கையை பாமக தயாரித்துள்ளது. 26 ஆண்டுகளாக பாமக மதுவுக்கு எதிராக குரல் கொடுக்கிறது. எங்களது தேர்தல் அறிவிப்புகளை திமுக காப்பி அடிக்கிறது.
மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே சுற்றுப்பயணத்தில் ஆட்டோவில் செல்கிறார், டீ கடையில் டீ குடிக்கிறார். நெசவு செய்கிறார். மலை வாழ் மக்களுடன் நடனமாடி நாடகமாடுகிறார். இவை அனைத்தும் மும்பையை சேர்ந்த இருவர் இயக்க ஸ்டாலின் நடித்து வருகிறார்.
நாங்கள் அறிவித்த பூரண மதுவிலக்கு, லோக் அயுக்தா போன்ற அறிவிப்புகளை தி.மு.க காப்பி அடித்து தற்போது கூறிவருகிறது. பாமக கட்சி அமைத்தால் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து நீர்பாசனத்தை பெருக்கும் திட்டம், விவசாயிகள் விலை நிர்ணயம் செய்யும் திட்டம், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமும், நெல் குவிண்டாலுக்கு ரூ.2,300 தருவோம். திமுக, அதிமுக தவிர வேறு யார் வேண்டுமானாலும் எங்களுடன் வரலாம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications