மனிதம் இல்லாத மயானம் வேண்டுமா?
-யாழினி வளன்
என்ன நடக்கிறது இந்த ஜனநாயக நாட்டில். நாம் இன்னும் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகத்தை நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் நம் ஒவ்வொருவர் மனதிலும் எழுப்பிக் கொண்டிருக்கிறது.
இவ்வளவு நாள் உறங்கி கொண்டோ அல்லது அமைதியாய் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த விழிகள் எல்லாம் இப்பொழுது தான் ஒரு அப்பாவிப் பெண்ணின் உயிர் தியாகத்தில் தூக்கம் கலைத்து மெல்ல விழித்தெழுந்துள்ளன. மவுனித்துப் போன அனிதாவின் உதடுகள் இதுவரை பேசாமல் கிடந்த பல உதடுகளுக்கு உண்மையை உரிமையை பேசச் சொல்லித் தந்துள்ளது. விளைவு தமிழகத்தில் ஒரு உயிர் விட்டுச் சென்ற சிறு துளி மாநிலத்தின் அத்தனை பக்கத்திலும் உணர்வலைகளை எழுப்பிப் பரப்பி விட்டது.
ஒரு சிதையின் நெருப்புக்கனல் துண்டில் எழுந்த உரிமை குரல் எனும் தீ கொஞ்சம் கொஞ்சமாக எழும்பி தமிழகத்தின் அத்தனைப் பகுதிகளிலும் கேள்விகளாய் வேள்விகளாய் எழும்பியது. பதில் சொல்ல வேண்டிய மாநில அரசும் மத்திய அரசும் மவுனம் காத்துக் கொண்டிருக்கிறது.
எழும்பிய தமிழகத்தின் உணர்வுகளை மதித்து பதில் சொல்ல வேண்டியவர்கள் உறங்கி கொண்டிருக்கிறார்கள். மக்களைக் காக்க வேண்டிய காவல் துறை போராடும் மக்களைக் காயப்படுத்திக்கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டுப் புரட்சியின்போது மக்களோடு மக்களாக குரல் கொடுத்த போலீஸ்காரர் இன்று அத்தனை பேரின் மனதிலும் நிழலாடுகிறார்.
மக்களின் குரலுக்கு மக்களின் கேள்விகளுக்கு காரணமான அத்தனை பேரும் அதற்குப் பதில் சொல்லவும் கடமை பட்டிருக்கிறார்கள். ஒரு குழந்தை கேள்வி கேட்டால் பதில் சொல்லி அதன் கேள்விகளைத் தெளிவுபடுத்தும் கடமையை கொண்ட ஆசிரியர் டேய் உக்காருடா எழும்பக்கூடாது, வாய மூடு கேள்வி கேக்காதே, தலை குனிந்து புத்தகத்தை மட்டும் பார் என்று சொல்வது போல எதுவும் பேசக் கூடாது என்கிறார்கள். குழந்தை மறுமுறை நிமிர்ந்தால் தலையில் கொட்டு ஓன்று வைத்து உக்காரு உக்காரு என்று சொல்லும் அழுத்தமான குரல்கள்தான் உத்தரவுகளாக வருகின்றன.
மாணவர்கள் எதிர்காலம் என்ற அக்கறை வந்திருந்தால் பள்ளி கல்வி நேரம் விடுத்து அதன் பின் உங்கள் குரல் இருக்கட்டும் என சொல்லியிருக்கலாம். மாணவ எதிர்காலம் கல்வி மேலான அக்கறை என நாம் நினைத்துக் கொள்ளலாம். உரிமைக் கேட்டு யாரும் போராடக்கூடாது என்னும் சர்வாதிகார குரல் வலுத்து வருவகிறது. ஹிட்லரின் சில பிம்பங்களை இனிக்க காணும் காலங்கள் நமக்கும் நெருங்குதோ என்ற சிறு அச்சம் பிறக்கிறது மனதுக்குள்.
சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு அமைதி நிலவ வேண்டும் என்கிறார்கள். மயானம் கூட அமைதி பூங்கா தான். மனிதம் இல்லாத மயானம் வேண்டுமா. நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.