அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கவுன்சிலிங் ஜூன் 3ல் துவக்கம்
சென்னை: பொறியியல் படிப்பில் சேருவதற்கான அண்ணா பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு வரும் ஜூன் மாதம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ , பி.டெக் படிப்பில் சேர அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் 2 லட்சம் உள்ளன. இது போக 85 ஆயிரம் இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ளன.
அரசு ஒதுக்கீட்டு இடங்களான 2 லட்சம் இடங்களில் சேர்வதற்காக அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் 20 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. அந்த தேதிதான் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்கவும் கடைசி நாள்.
இப்போதே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் அனுப்பி வருகிறார்கள். கலந்தாய்வு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தென் மாவட்ட மாணவர்கள் சென்னைக்கு வருவது சிரமம் என்று கருதி சென்னை உள்பட 3 இடங்களில் நடைபெற்றது.
ஆனால் அப்போது கலந்தாய்வு நடத்துவது சிரமமாக இருந்தது. கம்ப்யூட்டர்கள் சரியாக இயங்கவில்லை. எனவே சென்னையில் மட்டும் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, இந்த வருடம் சென்னையில் உள்ள அண்ணாபல்கலைக்கழகத்தில் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு ஜூன் மாதம் 3 ஆவது வாரத்தில் தொடங்கும் என்றார்.