தமிழகத்தில் 24 மணி நேரத்திற்கு வெயில் கொடுமையில்லை.. மழைக்கு வாய்ப்பு என தகவல்
அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கத்தரி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. நேற்றும்கூட திருத்தணியில் 106 டிகிரி வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. திருச்சி 104, வேலூர் 102, மதுரை 101 டிகிரி என வெப்பநிலை பதிவாகியுள்ளது.

என்றாலும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதேபோல, செங்கோட்டை தாலுகா பகுதிகளிலும், சேலம் மாவட்டத்திலும் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ, இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications