வஞ்சிரம் கிலோ ரூ. 950 வவ்வால் கிலோ ரூ. 750 - அட மீன்பிடி தடைக்காலம் ஆரம்பிச்சிருச்சு!
இன்னும் 45 நாட்களுக்கு மீன்களை நினைத்து கூட பார்க்க முடியாது அந்த அளவிற்கு மீன்களின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது.
சென்னை : வங்கக்கடலில் மின்பிடி தடைகாலம் நள்ளிரவு முதல் தொடங்கி விட்டதால் சென்னையில் மீன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. வவ்வால் மீன் கிலோ 700 ரூபாய்க்கும், வஞ்சிரம் மீன் கிலோ 950ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஏப்ரல் 15 முதல் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலம் தொடங்கிவிடும். இந்த கால கட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும். அப்போது மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

மீன் பிடித்தடைக்காலம்
ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலமாக அரசு உத்தரவின் பேரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கணக்கில் கொண்டும், கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும் இந்த மீன்பிடித் தடைக்காலத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இந்தாண்டிற்கான மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

45 நாட்கள் மீன் பிடிக்கத்தடை
சரியாக 45 நாட்கள் கடைபிடிக்கப்படும் மீன் பிடித் தடைக்காலத்தில் விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கரைகளிலேயே நிறுத்தப்படும். அப்போது படகுகளை பழுது பார்க்கும் வேலைகளை மீனவர்கள் செய்வார்கள். ஓய்வெடுக்கும் மீனவர்கள், படகுகளுக்கு வர்ணம் பூசுவார்கள்.

மீன்கள் வரத்து குறைவு
கட்டுமரம் மற்றும் மாருதி படகுகள் மூலமாக கரையோர மீன்பிடித் தொழில் மூலம் கிடைக்கும் மீன்கள் மட்டுமே இனி சந்தையில் விற்பனைக்கு வரும். இதனால், ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக்காலத்தில் மீன்வரத்து குறையும் என்பதால், மீன் விலை உயர்வது தவிர்க்க இயலாதது. மீன் பிடி தடை காலம் அமலுக்கு வந்துள்ளதால் சென்னையில் மீன் வரத்து குறைந்தது. இதனால் மீன் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளன.

மீன்கள் விலை உயர்வு
இன்று ஒரே நாளில் மீன் விலை பல மடங்குகள் அதிகரித்துள்ளது. சென்னையில் வஞ்சிர மீன் இதுவரை 1 கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்டு வந்தது. அது இன்று கிலோ ரூ.950 ஆக அதிகரித்தது. ஒரு கிலோ ரூ.400க்கு விற்கப்பட்டு வந்த வவ்வால் மீன் ரூ.700 ஆக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.250க்கு விற்கப்பட்ட பெரிய சங்கரா மீன் ரூ.350 ஆகவும், ரூ.350க்கு விற்கப்பட்ட கடம்பா மீன் ரூ.500 ஆகவும், ரூ..450க்கு விற்கப்பட்ட பெரிய இறால் ரூ.650 ஆகவும், ரூ.300க்கு விற்கப்பட்ட சிறு இறால் ரூ.550 ஆகவும் விலை உயர்ந்தது.












Click it and Unblock the Notifications