மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம்... அப்பல்லோ பிரதாப் ரெட்டி வரவேற்பு!
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி வரவேற்பு தெரிவித்துள்ளார். புதிய மருத்தவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் வசதிபடைத்தவர்களுக்குக் கிடைக்கும் உயர் மருத்துவம் இனி ஏழைகளையும் சென்றடையும் என்று அவர் கூறியுள்ளார்.
சென்னையில் அப்போலோ மருத்துவமனை, இதயம் மற்றும் நுரையீரல் நோய்களுக்கான சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதாப் ரெட்டி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இரண்டில் ஒரு பங்கு மக்கள் இரத்த அழுத்தம், சக்கரைநோய் ஆகியவற்றால் துன்பப்பட்டு வருகின்றன. காற்றுமாசுபாட்டைவிடப் புகைபிடிப்பதால் தான் நுரையீரல் அதிகம் பாதிக்கப்படுகிறது என்றார்.
மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள புதிய மருத்துவ காப்பீடு திட்டம் மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தால் வசதி படைத்தவர்களுக்குக் கிடைக்கும் உயர் மருத்துவம் இனி ஏழைக் குடும்பங்களுக்கும் கிடைக்கும் என்றார்.
'தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்' என்ற பெயரில் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை நிதியமைச்சர் அருண்ஜேட்லி பொதுபட்ஜெட்டில் அறிவித்தார். இதன்மூலம் நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி பேர் பயனடைவார்கள். இந்த திட்டத்தில் ஓராண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீட்டு வசதியைப் பெற முடியும்.
இந்த மருத்துவக் காப்பீடு உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டு திட்டங்களில் ஒன்று என சொல்லப்படுகிறது. இதன்மூலம் நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் பயன் அடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.