முதல்வர் பழனிசாமி, தினகரன் அணியை இணைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது... அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி
ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்த்துக் கொண்டது போல தினகரன் தலைமையில் செயல்பட முதல்வர் பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.
சென்னை : டிடிவி. தினகரன் தலைமையில் அதிமுக ஒன்றுபட்டு செயல்பட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி கூறியுள்ளார்.
டிடிவி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி திடீரென நடுநிலை நிலைப்பாட்டை எடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சென்னையில் இன்று டிடிவி. தினகரனை ரத்தினசபாபதி நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
முதல்வர் பழனிசாமியுடன் தினகரன் அணியை இணைப்பது குறித்து சுமூக தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால் முதல்வர் பழனிசாமி தரப்பில் பேச்சுவார்த்தையில் சில முரண்பாடுகள் இருக்கிறது. எனினும் தொடர்ந்து பேசி வருகிறேன்.
இணைப்பு பேச்சுவார்த்தை
இந்தக் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதனால் தான் இரு அணிகளிடமும் பேசி வருகிறேன். என்னுடைய முயற்சியை பலரும் பாராட்டியுள்ளனர். சுமார் 50 எம்எல்ஏக்கள் எனக்கு தொலைபேசியில் அழைத்து இணைப்பு பேச்சு நடத்துவதற்கு வரவேற்பு தெரிவித்தனர்.
சசிகலா
கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதோடு, ஆட்சியையும் ஊழல் ஆட்சி என்று சொன்னவர் ஓ.பன்னீர்செல்வம். அவரை அழைத்து ஏன் துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்பதே எங்களின் கேள்வி. மேலும் கட்சி நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டும் என்று எண்ணிய ஜெயலலிதாவின் ஆயுட்காலம் முழுவதும் அவருடன் இருந்தவர் சசிகலா.
ஏன் நீக்கனும்
சசிகலாவை கட்சியை விட்டு விலக்குவதற்கான அவசியம் என்ன என்ற கேள்விக்கு எதிர் அணியிடம் பதில் இல்லை. மேலூரில் நடந்த கூட்டமே தினகரன் பின்னால் தான் அதிமுக தொண்டர்கள் உள்ளார்கள் என்பதை நிரூபித்துள்ளது. கட்சியை எதிர்காலத்தில் சிறந்த முறையில் வழிநடத்தி செல்லும் ஆற்றம் தினகரனுக்கே உள்ளது.
ஓபிஸ்
ஓ.பன்னீர்செல்வத்தையே சேர்த்துக் கொண்டனர், பின்னர் ஏன் தயக்கம். அதிமுக ஒன்றுபட்டு தினகரன் தலைமையில் செயல்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம், இதற்காக தொடர்ந்து இரண்டு அணிகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவேன். இவ்வாறு ரத்தினசபாபதி கூறினார்.