அரவக்குறிச்சி தேர்தல் ரத்துக்கு காரணமான தேர்தல் பார்வையாளர் திடீர் மாற்றம்... ஏன்?
வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் மத்திய தேர்தல் செலவின பார்வையாளராக செயல்பட்டு வந்த சில் ஆஷிஸ் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர்: தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் மத்திய தேர்தல் செலவின பார்வையாளராக செயல்பட்டு வந்த சில் ஆஷிஸ் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக சட்டசபைத் தேர்தலின் போது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் அத்தொகுதிக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களில் விதிமீறல் இருக்கிறதா என்பதை கண்காணிக்க, பீஹாரை சேர்ந்த மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் சில்ஆஷிஸ் நியமிக்கப்பட்டார்.
இவர் கடந்த முறையும் கரூர் மாவட்டத்தில் தான் தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார். அப்போது, அதிமுக, திமுக கட்சிகளின் பணப்பட்டுவாடா மற்றும் செலவின விபரங்களை மத்திய தேர்தல் ஆணையத்திற்கு இவரே அனுப்பி வைத்தார். அதன்மூலம் தேர்தல் ரத்துக்கு காரணமாக இருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் இவர் அரவக்குறிச்சி தேர்தல் செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து பணியாற்றி வந்த சில் ஆஷிஸ் தற்போது திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
இவருக்குப் பதில், அஜய் தத்தார்த்ராயா என்பவர் புதிய தேர்தல் செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
இந்த திடீர் மாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இம்முறையும் கட்சிகள் பணப்பட்டுவாடாவை ஆரம்பித்து விட்டதாகவும், அது குறித்து புகார் எதுவும் மேலிடத்திற்கு செல்லாமல் தடுக்கவே சில் ஆஷிஸ் அதிரடியாக மாற்றப் பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.