விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு: அர்ச்சகர் விஜயராகவனிடம் 9 மணிநேரம் விசாரணை
சேலம்: டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா தற்கொலை சம்பவம் தொடர்பாக திருகோஷ்டியூர் அர்ச்சகர் விஜயராகவனிடம் சிபிசிஐடி காவல் துறையினர் சேலத்தில் 9 மணிநேரம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த 18ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கினை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விஷ்ணுப்ரியாவுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசியவர்களின் பட்டியலை தயாரித்த சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் அதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் மாளவியாவிடம் திங்கட்கிழமை விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ள பெருமாள் கோயில் அர்ச்சகர் விஜயராகவனை சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தனர்.
விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட சில தினங்களுக்குப் பின்னர் மாயமாகி தலைமறைவாக இருந்து வந்த விஜயராகவன் தனது வழக்கறிஞர்களுடன் சிபிசிஐடி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்தார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நாகஜோதி, டி.எஸ்.பி. ராஜன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 9 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.விசாரணையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த விஜயராகவன் தரப்பினர், விஷ்ணுபிரியாவுடனான நட்பு குறித்து போலீஸார் விசாரித்தனர் என தெரிவித்தனர். விசாரணை நேர்மையான முறையில் நடைபெற்றதாகவும், சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விஜயராகவன் முறையான பதில் அளித்ததாகவும் அவரது வழக்கறிஞர் குருநாதன் தெரிவித்தார்.