தமிழக சட்டசபை தேர்தலின்போது, எக்ஸிட் போல் முடிவுகள் என்ன? ரிசல்ட் என்ன தெரியுமா?
Recommended Video
சென்னை: தேர்தலுக்கு பிந்தைய, குஜராத் மாநில எக்ஸிட் போல் இரு தினங்கள் முன்பு வெளியாகியிருந்தது. பல்வேறு மீடியா நிறுவனங்கள், கணக்கெடுப்பு ஏஜென்சிகளுடன் இணைந்து இதை செய்திருந்தன.
அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளுமே குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றும், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியாது என்றுமே கூறியிருந்தன.
இதனால், பாஜகவினர் குஷியிலுள்ள நிலையில், காங்கிரஸ் வட்டாரத்தில் ஏமாற்றம் தென்படுகிறது.
துல்லியம் இல்லையே
அதேநேரம், சில அரசியல் விமர்சகர்கள் எக்ஸிட் போல் முடிவுகள் மாறக்கூடியவைதான். அதில் துல்லியம் அதிகம் கிடையாது என்றும் கூறுகிறார்கள். இதற்கு நல்ல உதாரணம் தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுகள்தான். எக்ஸிட் போலில் வந்தது ஒன்றாகவும், ரிசல்ட் மற்றொன்றாகவும் இருந்தது.
பாருங்கள்
அதுகுறித்த விவரத்தை பார்ப்போம். இந்தியாடுடே-ஆக்சிஸ் அமைப்பு வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகளில், 99 இடங்களை அதிமுக பிடிக்கும் என்றும், 132 இடங்களை திமுக கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.
திமுக அபார வெற்றியாம்
சாணக்யா கருத்து கணிப்போ அதிமுகவுக்கு வெறும் 90 இடங்களும், திமுகவுக்கு அமோகமாக 149 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தது. என்டிடிவி திமுகவுக்கு 120 இடங்களும், அதிமுகவுக்கு 103 தொகுதிகளும் கிடைக்கும் என கணித்திருந்தது.
ஒரே ஒரு கணிப்பு பலித்தது
அதேநேரம், சி-ஓட்டர் எக்ஸிட் போல் முடிவுகள் மட்டுமே ஓரளவுக்கு பலித்தது. அதிமுக 139 தொகுதிகளில் வெல்லும் என்றும், திமுக 78 தொகுதிகளில் வெல்லும் எனவும், ம.ந.கூ 15 தொகுதிகளில் வெல்லும் எனவும் கணித்திருந்தது சி-ஓட்டர். அவர்கள் சொன்ன எண்கள் அப்படியே நடக்கவில்லை என்றபோதிலும், டிரெண்ட்டை சரியாக கணித்திருந்தது.
இப்போது என்ன சொல்கிறது
இதனால், இப்போது குஜராத் எக்ஸிட் போலில் சி-ஓட்டர் என்ன சொல்லியுள்ளது என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆனால், காங்கிரசுக்கு இதில் ஏமாற்றம்தான். சி-ஓட்டர் மற்றும் ரிபப்ளிக் டிவி இணைந்து நடத்திய எக்ஸிட் போல்படி பாஜகவுக்கு 108 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 74 தொகுதிகள் கிடைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.