ஜெ.மரணம்- தினகரன், கிருஷ்ணப்பிரியா, பூங்குன்றனுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தினகரன், கிருஷ்ணப்பிரியா, பூங்குன்றன் ஆகியோருக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சசிகலா உறவினர்கள் டிடிவி தினகரன், கிருஷ்ணப்பிரியா, ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றம் ஆகியோர் ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா கடந்த ஆண்டு 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள், எதிர்க்கட்சியினர் புகார் கூறினர்.
இதையடுத்து அதிமுக பிளவுப்பட்டிருந்தபோது ஓபிஎஸ் அணியினருடம் அதே கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும் அதிமுகவின் அணிகள் இணைய வேண்டுமானால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தியது.
பிரமாண பத்திரங்கள்
இதனால் தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவருக்கென எழிலகத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விவரங்களை பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யலாம் என்று கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில் தீபா, மாதவன், திமுக மருத்துவர் சரவணன் உள்ளிட்டோர் நேரடியாக சென்று பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
மருத்துவர்கள் ஆஜர்
அரசு மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த
பிற மருத்துவர்கள், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராம் மோகனராவ் உள்ளிட்டோரை ஆறுமுகசாமி விசாரணைக்கு அழைத்திருந்தார்.
பூங்குன்றனும் ஆஜராக உத்தரவு
டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் டிடிவி தினகரன், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றம் ஆகியோர் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
வேலை பார்த்தவர்களின் பட்டியல்
மேலும் அவர்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை 7 நாட்களுக்குள் கமிஷனிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இவர்களில் கிருஷ்ணப்பிரியா வரும் ஜனவரி 2-ஆம் தேதி ஆஜராகவுள்ளார். அப்பல்லோ மருத்துவர் சத்தியபாமா வரும் ஜனவரி 4-இல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் வேலை பார்த்தவர்களின் பட்டியலை கொண்டு வர பூங்குன்றனுக்கு உத்தரவிட்டுள்ளது.