ஜெ.வை சந்தித்த அருண் ஜேட்லி... அதிர்ச்சியில் தமிழக பாரதிய ஜனதா!
சென்னை: முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலருமான ஜெயலலிதாவை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி திடீரென சந்தித்திருப்பது ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட மும்முரமாக களம் இறங்கியிருக்கும் தமிழக பாரதிய ஜனதாவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13-ந் தேதி நடைபெற உள்ளது. பிரதான கட்சிகளான ஆளும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகியவை வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்த கோதாவில் குதிப்பதற்கு தமிழக பாரதிய ஜனதாவும் மும்முரம் காட்டி வருகிறது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் பிராமணர்கள் அதிகமாக இருப்பதால் கணிசமான வாக்குகளை வாங்கி அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம் என்பது தமிழக பா.ஜ.க.வின் கணக்கு. ஆனால் இந்த கனவுக்கு வேட்டு வைத்திருக்கிறார் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி.
அருண் ஜேட்லி- ஜெ. சந்திப்பு
சென்னையில் ஆடிட்டர் குருமூர்த்தி இல்ல திருமணத்துக்கு வந்த அருண்ஜேட்லி, போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு தனிப்பட்ட சந்திப்பாக கூறப்பட்டாலும் பிரதமர் ஒப்புதலுடன் நடந்த சந்திப்பாக கூறப்பட்டதால் அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முதலாவது மத்திய அமைச்சர்
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைத் தண்டனையை அனுபவித்து தற்போது ஜாமீனில் இருக்கும் ஜெயலலிதாவை சந்தித்துள்ள முதலாவது மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி என்பதும் குறிப்பிடத்தக்கது.
எப்படி சந்திக்கலாம்?
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவை மத்திய அமைச்சராக இருக்கும் அருண் ஜேட்லி எப்படி சந்திக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. ஆனால் தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் முகத்திலோ பெரும் அதிர்ச்சிதான் வெளிப்படுகிறது.
லோக்சபா தேர்தல் நிலை.
லோக்சபா தேர்தலிலேயே தாமரைக்கு ஓட்டுப் போட்டாலும் இலைக்கு ஓட்டுப் போட்டாலும் ஒன்றுதான் என்கிற பிரசாரத்தை அ.தி.மு.க. முன்னெடுத்ததாக புகார் எழுந்தது. தற்போது ஜெயலலிதாவை அருண் ஜேட்லி சந்தித்திருப்பதன் மூலம் அதுவும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலின் போது நிகழ்ந்திருக்கும் இந்த சந்திப்பினால் லோக்சபா தேர்தல் நிலைக்கே தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் தள்ளப்பட்டுள்ளனர்.
டெபாசிட் கிடைக்காதோ?
என்னதான் ஸ்ரீரங்கத்தில் வேட்பாளரை நிறுத்தினாலும் பழைய பல்லவியைப் போலவே, தாமரைக்கு ஓட்டுப் போட்டாலும் இலைக்கு ஓட்டுப் போட்டாலும் ஒன்றுதான் என்ற நிலையை வாக்காளர்கள் எடுத்தால் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருக்கு டெபாசிட் கூட கிடைக்காமல் போய்விடும். இதைப்பற்றியெல்லாம் டெல்லி பா.ஜ.க. மேலிடம் கண்டுகொள்வதாகவும் இல்லை.
அ.தி.மு.கவுடன் இணக்கம்
டெல்லி பா.ஜ.க. மேலிடத்தைப் பொறுத்தவரையில் ராஜ்யசபாவில் அண்ணா தி.மு.க. ஆதரவு தேவை. ராஜ்யசபாவில் 11 எம்.பிக்களையும் லோக்சபாவில் 37 எம்.பிக்களையும் கொண்டிருக்கிற அ.தி.மு.க.வை அனுசரித்துப் போகிற போக்கையே பா.ஜ.க. மேலிடம் கடைபிடித்து வருகிறது. இதற்காகத்தான் ஜெயலலிதா வழக்குகளுக்காக ஆஜரான இந்நாளைய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை பா.ஜ.க மேலிடமே பிரதமர் மோடியின் ஒப்புதலுடன் தூது அனுப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பரிதவிக்கும் தமிழக பா.ஜ.க.
இந்த சந்திப்பின் மூலம் நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை 'பஞ்சாயத்து' இல்லாமல் நிறைவேற்றலாம் என்பதுதான் பா.ஜ.க. மேலிடத்தின் எண்ணம். இதனால் என்ன செய்வது என்று தெரியாத பரிதாப நிலையில் விழிபிதுங்கி தமிழக பா.ஜ.கவினர் தவித்து வருகின்றனர்.