சென்னையில் ஆட்டோ கட்டணம் குறைக்கப்படும்: ஹைகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
சென்னை: எரிபொருள் விலை குறைந்துள்ளதால், சென்னையில் ஆட்டோ கட்டணம் குறைக்கப்படும் என்று ஹைகோர்ட்டில் தமிழக அரசின் போக்குவரத்து துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறைந்துள்ள நிலையில், அதற்கேற்ப ஆட்டோ கட்டணத்தின் விலையை குறைக்க வேண்டும் என்று ஹைகோர்ட்டில் கோவை நுகர்வோர் அமைப்பை சேர்ந்த லோகு என்பவர் தாக்கல் செய்த ஒரு மனுவிற்கு, போக்குவரத்து துறை கமிஷனர் இன்று தாக்கல் செய்த பதில் மனுவில், இத்தகவலை தெரிவித்திருந்தார்.
தற்போது ஆரம்பகட்ட கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்படுவதாகவும், அதை ரூ.24 என்று குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. அதன்பிறகு கி.மீக்கு தற்போது ரூ.12 வசூலிக்கப்படுவதாகவும், அது 50 பைசா குறைத்துக்கொள்ளப்பட்டு ரூ.11.50 என வசூலிக்க உத்தரவிடப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
அதேநேரம், அரசு அட்டவணைப்படி ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க 6 மாத காலம் தேவைப்படும். அந்த விஷயத்தில் அரசு முடிவெடுத்து பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இவ்வழக்கு ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.