எல்லா விளைவுக்கும் எதிர்விளைவு உண்டு... ஓரம்கட்டப்பட்ட ஆவடிகுமார் வார்னிங்
டி.வி விவாதங்களில் அனுமதி அளிக்கப்படாதது குறித்து ஆவடி குமார் வருத்தம் தெரிவித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார்.
சென்னை : அதிமுக சார்பில் ஊடக விவாதங்களில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வெளியாகி உள்ள பட்டியலில் தனது பெயர் இல்லாததால் தலைமை கழக பேச்சாளர் ஆவடி குமார் அதிருப்தியில் உள்ளார்.
அதிமுக தலைமையகத்தில் இரண்டு நாட்களுக்கு முன் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதன் பின், ஊடகங்களில் அதிமுக சார்பில் பேச அனுமதி அளிக்கப்பட்டோரின் பட்டியலை ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டனர்.

இந்த பட்டியலில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன் உட்பட 12 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களை தவிர வேறு யாருக்கும் டி.வி விவாதங்களில் பேச அனுமதி இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் பட்டியலில் தனது பெயர் இல்லாததால், அதிமுக தலைமை கழக பேச்சாளர் ஆவடி குமார் அப்செட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சி கடும் நெருக்கடியில் இருந்தபோது, முக்கிய நட்சத்திர பேச்சாளர்கள் எல்லாம் டி.டி.வி தினகரன் அணியில் இருந்துகொண்டு கடும் எதிர்ப்பு கொடுத்த போதும் விவாதங்களில் அதிமுகவை காப்பாற்றிய தனக்கு பட்டியலில் இடமில்லாததால் அவர் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது.
தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் ஆவடி குமார் தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதை விரும்பாத சிலரின் தலையீட்டால் பட்டியலில் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
இதுகுறித்து வெளிப்படையாக புலம்ப முடியாத நிலையில், பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் தனது கோபத்தை நாசூக்காக பதிவு செய்து உள்ளார் ஆவடி குமார். இதுகுறித்த பதிவு ஒன்றில், ஏமாற்றம் இல்லை; ஆனால், எல்லா விளைவுக்கும் எதிர்விளைவு உண்டு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, நேற்றுவெளியிட்டுள்ள பதிவில், 'தன்னுடைய அரசியல் பயணத்தை பச்சோந்திகள் தடுத்துவிடமுடியாது' என்று குறிப்பிட்டு பதிவிட்டு உள்ளார் ஆவடி குமார். ஆனால், இதில் யாரை பச்சோந்தி என்று குறிப்பிடுகிறார் என்பது பற்றிய தகவல்கள் இல்லை.












Click it and Unblock the Notifications