சனிக்கிழமை மாலை முதல் 16ம் தேதி மாலை வரை கருத்துக்கணிப்புகளுக்குத் தடை!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குபதிவை முன்னிட்டு நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை முதல் 16ம் தேதி மாலை வரை கருத்துக்கணிப்புகளை நடத்தவோ அல்லது வெளியிடவோ கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் திங்களன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, வரும் 14ம் தேதி, அதாவது சனிக்கிழமை மாலையுடன் வேட்பாளர்கள் பிரச்சாரங்களை முடித்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
கூடவே, சனிக்கிழமை மாலை முதல் வாக்குபதிவு நாளான திங்கட்கிழமை மாலை வரை கருத்துக்கணிப்புகளை நடத்துவதற்கும், அதன் முடிவுகளை வெளியிடுவதற்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
விதிமுறைகள்...
தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தல் வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் அமலில் இருக்கும்.
* தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
கருத்துகணிப்புகளுக்கு தடை...
* யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் போன்ற அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
* வருகிற 14-ந் தேதி மாலை 6 மணி முதல் 16-ந் தேதி மாலை 6 மணி வரை கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கு, கருத்து கணிப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. 4.4.2016 அன்று காலை 7 மணி முதல் 16.5.2016 அன்று மாலை 6.30 மணி வரையில் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்து கணிப்புக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகள் சிறை...
* பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்க செயல்பாடு அல்லது ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுது போக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடுசெய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது.
இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126(2)-ன் படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
வாகன அனுமதி...
* தொகுதி வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் ஆகியோர் மற்றும் அந்த தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் வருகிற 14-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
* கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா? என்பது கண்டறியப்படும்.
* வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்பட வாகன அனுமதிகள் வருகிற 14-ந் தேதி மாலை 6 மணி முதல் செயலற்றதாகி விடும்.
வேட்பாளர்கள் கவனத்திற்கு...
* வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளரும் பின்வருவனவற்றிற்கு தேர்தல் நடத்தும் அதிகாரியிடமிருந்து தனி அனுமதி பெற உரிமையுடையவராவார். அவை வருமாறு:-
தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் மற்றும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான அவரது பணியாளர்கள் அல்லது கட்சி பணியாளர்களின் பயன்பாட்டிற்கான மற்றொரு வாகனம்.
* வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 133-வது பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.
பிரசார அலுவலகம்...
* இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது''என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.