அஜீத்துக்கு மாரடைப்பு என வதந்திய பரப்பியவர்கள் மீது போலீசில் புகார்
சென்னை: அஜீத்துக்கு மாரடைப்பு என்று வெளியான செய்தி ஆதாரமற்றது என்று அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அஜித்தின் உடல்நிலை குறித்து தவறான வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது போலீஸில் புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
அஜீத் நடிக்கும் வேதாளம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் அஜீத்துக்கு காலில் காயம் ஏற்பட்டதையடுத்து படப்பிடிப்பு ரத்தானது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஏற்கனவே ஆரம்பம் படத்தில் நடித்தபோது காயம்பட்ட இடத்திலேயே மீண்டும் காயம் ஏற்பட்டதால் வலி அதிகமாக இருந்தது. இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்பதுபற்றி டாக்டர்கள் ஆலோசனை கூறி உள்ளனர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடந்தது. அதில் ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்கள் நேரில் வந்து வாக்களித்தனர். அஜீத் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. வரவில்லை. இது அவரை பார்க்க வாக்குசாவடி எதிரில் திரண்டிருந்த அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அஜீத் வாக்களிக்காதது பற்றி நாசர் கூறும்போது,'நடிகர் சந்தானம் ஐதராபாத்தில் இருந்ததால் தன்னால் வாக்களிக்க வரமுடியவில்லை என என்னிடம் கூறினார். அதுபோல் அஜீத்துக்கும் எதிர்பாராத சூழல் இருந்திருக்கலாம்' என்றார். ஆனாலும் அஜீத் வாக்களிக்க வராதது இன்னும் கோலிவுட்டில் விவாத பொருளாகவே இருந்து வருகிறது.இ
தற்கிடையில் நேற்று வாட்ஸ்அப்பில் அஜீத் பற்றி வதந்தி பரவியது. மாரடைப்பு ஏற்பட்டு அஜீத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்காக பிரார்த்தியுங்கள்' என அவரது மேனேஜர் இணைய தள பக்கத்தில் மெசேஜ் வெளியிட்டது போன்று தகவல் அமைந்திருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அஜீத் மேனேஜரிடம் தொடர்புகொண்டுகேட்டபோது,'யாரோ சிலர் போட்டோ ஷாப் மூலம் எனது இணைய தள பக்கத்தை உருவாக்கி இதுபோல் வதந்திகள் பரப்பி உள்ளனர். அதை நம்ப வேண்டாம்' என்றார்.
அஜித்தின் உடல்நிலை குறித்து சில தீய எண்ணம் படைத்தவர்கள் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அவர் நலமாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்" என்றும் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வதந்தி பரப்பியவர்கள் மீது போலீஸார் புகார் அளிக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.