கரடி தாக்கி இறந்த கன்றுக்குட்டி... ஊருக்குள் உலா வருவதால் பீதியில் மக்கள்!
நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே கரடி தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழந்துள்ளது. காட்டுக்குள் வசித்து வரும் கரடி ஊருக்குள் உலா வரும் காரணத்தால் அச்சமடைந்த மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.
ஆரல்வாய்மொழியை அடுத்த பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் முப்பந்தல் பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். ஓட்டலுக்கு பின்புறம் மாட்டுப் பண்ணையும் வைத்திருந்தார். இரவு மாடுகளை பார்க்கச் சென்றபோது, அங்கிருந்த கன்றுகுட்டி ஒன்றை காணவில்லை என கூறப்படுகிறது. அதைத் தேடி சென்றபோது, பண்ணையின் வெளிப்புறத்தில் அந்த கன்று குட்டி இறந்து கிடந்தது.
அதிர்ச்சி அடைந்த முருகேசன் கன்றுக்குட்டியின் உயிரிழப்புக்குக் காரணம் தெரியாமல் தவித்தபோது பண்ணைக்குள் ஒரு கரடி நிற்பதை கண்டார். இதை பார்த்து பீதியில் உறைந்த அவர், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஊருக்குள் வந்து பண்ணையில் கரடி நிற்பதாக ஊர் மக்களிடம் கூறினார்.
வனத்துறையினருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. வன அலுவலர் சரவணன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து கரடியை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் கரடி பண்ணையை விட்டு நகர மறுத்து அங்குள்ள ஒரு அறைக்குள் சென்று படுத்துக் கொண்டது. இதையடுத்து வன ஊழியர்கள் பட்டாசுகளை வெடித்து கரடியை விரட்ட ஏற்பாடு செய்தனர்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு பொய்கை அணை பகுதியில் நடமாடிய கரடி அண்ணன்-தம்பி இருவரை கடித்து குதறி காயப்படுத்தியது. இப்போது ஊருக்குள் மீண்டும் கரடி புகுந்திருப்பது ஊர் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டுபோய் விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.