”வழக்கறிஞர் தொழில், ஒரு இயக்கம் அல்ல…அது ஒரு சமூக பணி” தலைமை நீதிபதி பேச்சு
புதுச்சேரி: வழக்கறிஞர்கள் தொழில் தொழிலாளர் இயக்கமல்ல என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
நாணயத்திற்கு இருபக்கம் இருப்பது போல நீதித் துறையும், வழக்கறிஞர்களும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி சதீஷ் கே.அக்னிகோத்ரி பேசினார்.
புதுச்சேரி ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் 8.80 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமரச மையம், சட்ட உதவி மையம் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டிடங்களின் திறப்புவிழா புதுவை முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.
புதிய கட்டடங்களை ஐகோர்ட் நீதிபதி சதீஷ் கே.அக்னிகோத்ரி திறந்து வைத்து பேசியபோது," புதுச்சேரி மாநிலம் ஒரு அபூர்வ மாநிலமாக உள்ளது. புதுச்சேரியில் தமிழிலும், ஏனாமில் தெலுங்கிலும், மாகேயில் மலையாளத்திலும் பேசுகின்றனர். பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தை பொதுவாக பலர் பேசுகின்றனர்.
புதுச்சேரி முதல்வர் நீதித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய கட்டடங்களை கட்டிக் கொடுத்துள்ளார். கட்டடம் மட்டும் அழகாக இருந்தால் போதாது.கட்டடத்தின் உள்ளே நடக்கும் செயல்பாடுகளும் நன்றாக இருக்க வேண்டும். ஒரு நாணயத்திற்கு இருபக்கம் இருப்பது போல நீதித் துறையும், வழக்கறிஞர்களும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.
வழக்கறிஞர்கள் தொழில் என்பது பணம் சம்பாதிக்க மட்டும் என்று நினைக்காமல் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். வழக்கறிஞர்கள் என்பது தொழிற்சங்கமோ, தொழிலாளர்களின் இயக்கமோ என்று நினைக்கக் கூடாது. நீதிபதிகளை கட்டாயப்படுத்தியோ , சத்தம் போட்டோ தீர்ப்பை வாங்கக் கூடாது.
அதுமாதிரி தீர்ப்பு வாங்கினால் சம்பந்தபட்ட நீதிபதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். நீதிபதிகள் யாருக்கும் அஞ்சாமல் நியாயத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் சம உரிமை வழங்கி உள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதில் ஜாதி, மதம், இனம் என்ற வேறுபாடு காட்டப்படுவதில்லை"என்று அவர் பேசினார்.