பிரதமருக்கு கறுப்புக் கொடி...சென்னையில் பாரதிராஜா, சீமான், வேல்முருகன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது
தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத மோடியே திரும்பி போ என போராட்டம் நடத்திய பாரதிராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video
சென்னை: பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக போராட்டம் நடத்த வந்த இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராணுவ தளவாட கண்காட்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.
இந்நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவோம் என்று அரசியல் கட்சியினரும், தமிழ் ஆர்வலர்களும், விவசாயிகளும் தெரிவித்தனர்.
இயக்குநர்கள் போராட்டம்
அதன்படி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதுபோல் விமான நிலையப் பகுதியில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கெளதமன், கரு பழனியப்பன் உள்ளிட்டோர் தலைமையில் தொண்டர்கள் திரண்டு வந்தனர்.
கீழே இறங்குமாறு
அனைவரும் மோடிக்கு எதிராக உணர்ச்சிகரமாக கோஷமிட்டனர். மோடியே திரும்பிப் போ என்று கோஷமிட்டனர். மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் விளம்பர பதாகைகள் மீது ஏறி அபாயகரமான வகையில் போராட்டம் நடத்தியவர்களிடம் பாரதி ராஜா கீழே இறங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
பாரதி ராஜா உள்ளிட்டோர் கைது
அதை ஏற்று அவர்கள் கீழே இறங்கினர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்றாத மோடியே திரும்பி போ என்றும் அவர்களுக்கு பச்சைக் கொடி காட்டுவோம் என்று பேசிய தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாரதிராஜா உள்ளிட்டோர் கோஷமிட்டனர். இதையடுத்து பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர்.
பரபரப்பு
அப்போது பாரதிராஜா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி ஆவேசமாக கோஷமிட்டார். இயக்குநர்கள் அமீர், கெளதமன், கரு. பழனியப்பனும் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து வேனில் அழைத்துச் செல்லப்பட்டு விட்டனர்.
சீமான் கைது
இதேபோல் பரங்கிமலையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும், விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற சீமான் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.