கரூரில் நட்ட நடு ரோட்டில் "டமால்"னு ஒரு பள்ளம்..!
கரூர்: அதிக பாரம் ஏற்றிய லாரியும் செல்லவில்லை, கொட்டித் தீர்க்கும் வகையில் மழையும் பெய்யவில்லை. ஆனால் கரூரில் நட்ட நடு ரோட்டில் மிகப் பெரிய பள்ளம் திடீரென ஏற்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பள்ளம்னா உங்க வீட்டுப் பள்ளம், எங்க வீட்டுப் பள்ளம் இல்லை பாஸ்.. மாபெரும் பள்ளம். 20 பேரை உள்ளே உட்கார வைத்து விடலாம். அப்படி ஒரு பள்ளம்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் நேற்று அரவக்குறிச்சி பகுதியில் 73 மி.மீட்டர் அளவும், கரூர் பரமத்தி பகுதியில் 151.6 மி.மீட்டர் அளவும் பதிவாகின. குளித்தலை 20 மி.மீட்டர், மாயனூரில் 44 மி.மீட்டரும் பதிவாகின. கரூரில் 69 மி.மீட்டர் அளவும் பதிவாகின, அனைப்பாளையம் 111 மி.மீட்டர் அளவும் பதிவாகின. கிருஷ்ணராயபுரத்தில் 42 மி.மீட்டர், மைலம்பட்டி பகுதியில் 85 மி.மீட்டர் அளவும் என கரூர் மாவட்டத்தில் 12 இடங்களில் மொத்தமாக சுமார் 804 மி.மீட்டர் அளவு பதிவாகின. சராசரி மழையளவு 67 விழுக்காடு ஆகும்.
இந்நிலையில் கரூர் இராஜாஜி நகர் பகுதியில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பள்ளம் ஏற்பட்ட போது போக்குவரத்து அதிகம் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த திடீர் பள்ளத்தை கரூர் கலெக்டர் ஜெயந்தி, கரூர் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, கரூர் நகர்மன்ற தலைவர் தமிழ்நாடு செல்வராஜ், நகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் என பலரும் ஆய்வு செய்து மாற்று வழியில் மற்ற வாகனங்களை திருப்பி விட்டனர்.
இதே போல, கரூர் காவல் நிலையம் அருகே சி.எஸ்.ஐ அரசு உதவி பெரும் பள்ளியில் மழை நீர் குளம் போல தேங்கி காணப்பட்டதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் பெரும் அவதிக்குள்ளானார்கள். மேலும் இப்பகுதி மட்டுமில்லாமல் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனை அருகிலேயே உள்ள ரோட்டில் மழைநீர் ஏரி போல் வடியாமல் இருந்ததால் நோயாளிகளுக்கு மீண்டும் நோய் வருமோ என்ற அச்சத்தில் காணப்படுகின்றனர்.