ஜோதியிருக்கு ‘மணி’யில்லை… ஆனாலும் நம்பிக்'கை' இருக்கு….!
கரூர்: கோடீஸ்வரர்களும், பெரும் பண முதலைகளும் சந்திக்கும் தேர்தல் களத்தில் வெறும் ரூ.2500 ரூபாயை மட்டுமே கையில் வைத்துக்கொண்டு களமிறங்கியிருக்கிறார் கரூர் வேட்பாளர் ஜோதிமணி.
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலேயே தன்னுடைய கையிருப்பை கூறிவிட்டார் ஜோதிமணி. இதனால் பிரியாணியும், குவாட்டரும் எதிர்பார்த்து வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
38 வயதாகும் ஜோதிமணி மகிளா காங்கிரசின் தேசிய செயலாளர். க.பரமத்தி யூனியன் பஞ்சாயத்து கவுன்சிலராக 1996ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டுவரை பத்தாண்டுகள் வரை பணியாற்றியுள்ளார்.
கரூர் சட்டமன்ற தொகுதி
இந்த அனுபவம்தான் அவரை 2011ம் ஆண்டு கரூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்க காரணமாக இருந்தது.
ஜோதி இருக்கு ‘மணி’ வேணுமே
கோடி கோடியாய் செலவழித்து வாக்கு சேகரித்து வருகின்றனர் எதிர்கட்சி வேட்பாளர்கள். அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தம்பித்துரையும், திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சின்னச்சாமியும் கோடீஸ்வர வேட்பாளர்கள். தேமுதிக வேட்பாளர் என்.எஸ். கிருஷ்ணனும் ஓரளவிற்கு வசதி படைத்தவர்தான்.
சொத்து மதிப்பு
ஜோதிமணி தனது வேட்புமனுவில் அசையும் சொத்தாக ரூ. 7 லட்சத்து 82 ஆயிரத்து 426 சொத்து மதிப்பை தாக்கல் செய்தார். அதே போன்று தாயார் பெயரில் ரூ.8 லட்சத்து 11 ஆயிரத்து 484 சொத்து மதிப்பை தாக்கல் செய்தார். இதே போன்று அசையா சொத்தாக ரூ.7 லட்சம் மதிப்பிலும், தாயார் பெயரில் ரூ.20 லட்சம் மதிப்பிலும் சொத்து மதிப்பை தாக்கல் செய்துள்ளார்.
கிளீன் இமேஜ்
பணம் ஒரு பிரச்சினை இல்லை. அது என் வெற்றியை பாதிக்காது. எனக்கு என் நேர்மையின் மீது நம்பிக்கை இருக்கிறது என்கிறார். 18 ஆண்டுகால தூய்மையான அரசியல்வாழ்க்கை என் வெற்றியை தீர்மானிக்கும் என்கிறார் ஜோதிமணி.
சட்டமன்ற தேர்தலில் ரூ.5000
சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது ஜோதிமணியிடம் கையில் இருந்த பணம் ரூ.5000 மட்டுமே. கட்சி கொடுத்த ரூ.7 லட்சத்தை செலவு செய்து கணக்கும் ஒப்படைத்திருக்கிறார். அதேபோல இம்முறையும், சொற்ப பணத்துடன் நம்பிக்கையுடன் களம் காண்கிறார் ஜோதிமணி.
சுறுசுறுப்பான பிரசாரம்
உள்கட்சியினரின் உள்குத்து ஒருபுறம்... சீட் கிடைக்காத காரணத்தினால் கட்சிக்காரர்களின் எதிர்ப்பு அலை மறுபுறம் இருந்தாலும்... சுறுசுறுப்பாக பிரசாரத்தை தொடங்கியுள்ளார் ஜோதிமணி. கரூர் தொகுதியில் இருந்து மக்கள் பணத்தையா? நம்பிக்கையையா? யாரை தேர்வு செய்து அனுப்ப போகின்றனரோ?