பில்லா ரங்காதான் இனி அரசியலுக்கு வர முடியும்... யாரை சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்?
அரசியலில் இனிமேல் பில்லா ரங்காதான் ஈடுபட முடியும் என்று பேசி பரபரப்பை பற்றவைத்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
Recommended Video

சென்னை: ரஜினி அரசியலுக்கு வரலாம். ஆனால் ஏற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பில்லா, ரங்காதான் இனிமேல் அரசியலில் ஈடுபட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர், தனது அரசியல் பிரவேசம் குறித்து 31ஆம் தேதியன்று அறிவிப்பதாக கூறினார்.
ரஜினியின் இந்த அறிவிப்பு குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரோ, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறி முடித்துக்கொண்டார்.

பில்லா ரங்கா
ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது குறித்து காட்டமாக விமர்சித்துக்கொண்டிருந்தார் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுகவில் இருந்து ஒரு செங்கலை கூட யாராலும் அசைக்க முடியாது என்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் தான் தினகரன் வெற்றி பெற்றுள்ளார் எனவும் ஜெயக்குமார் கூறினார். இனிமேல் பில்லா, ரங்காதான் அரசியலில் ஈடுபட முடியும் என்று கூறினார்.

வெற்றி தோல்வி
வாழ்க்கை என்பதே போராட்டம்தான். தேர்தலில் வெற்றி என்பதுதான் அனைவரின் இலக்காக இருக்கும். அதிமுக என்பது எஃகு கோட்டை. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தோல்வியால் பாதிப்பு ஏற்படாது. இந்த தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி கொள்ளைடிக்கப்பட்ட வெற்றி. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தால், கொள்ளைடிக்கப்பட்ட வெற்றி இது.

யாரும் வரலாம்
இந்த ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த் 31ஆம் தேதிதானே தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக கூறியுள்ளார். அறிவிக்கட்டும், அதன் பிறகும் அதை பற்றி கருத்து கூறலாம்.

மக்கள் ஏற்பார்களா?
அரசியல் ஒரு போர் என்று ரஜினி கூறியுள்ளார். தேர்தலும் போர் மாதிரிதான். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம். அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் ரஜினியை ஏற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

திமுகவிற்கு பின்னடைவு
வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, அதிமுகவிற்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என செயல்பட்ட ஸ்டாலினுக்கும், திமுகவிற்கும் இந்த தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தினகரன் ஆதரவு நிலைப்பாடு அவரது கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினகரன் ஃபார்முலா
திருமங்கலம் ஃபார்முலா மூலம் திமுக தேர்தலில் புதிய முறைகேட்டை புகுத்தியது. தினகரன் தற்போது வேறு ஒரு புதிய ஃபார்முலாவை பயன்படுத்தியுள்ளார். 20 ரூபாய் நோட்டை டோக்கனாக கொடுத்து வாக்கு வாங்கியுள்ளார். அவர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications