பாஜக-பாமக-தேமுதிக கூட்டணியை உருவாக்கிய 'குடும்பங்கள்'.. மகன், மச்சானுக்கு ராஜ்யசபா சீட்டுகள்!
சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேமுதிகவை இணைக்க பெரும் போராட்டங்களை நடத்தியே இருக்கின்றன 'குடும்பங்கள்'..அதுவும் மகன், மச்சானுக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என்ற பேரத்தின் அடிப்படையில்..
தேசிய கட்சிகளோடும் திராவிட கட்சிகளோடும் கூட்டணியே கிடையாது என்று அறிவித்தது பாமக. இதனால் ஜாதிய கட்சிகளை அரவணைத்துக் கொண்டு சமூக ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியது பாமக.
அசராத அன்புமணி
ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என முயற்சிகளள மேற்கொண்டார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி. அன்புமணியின் முயற்சியை தொடக்கம் முதலே காடுவெட்டி குரு எதிர்த்தாலும் சொல்வதும் செய்வதும் 'ஐயா'வின் மகனாச்சே.. மவுனம் காக்க வேண்டிய நிலை..
இழுபறி
அப்படி இப்படி என பாஜகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்ததில் 10 தொகுதியை விட்டுக் கொடுக்கவே முடியாது என்பதில் பிடிவாதம் காட்டியது பா.ம.க. இதனால் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வியும் எழுந்தது.
அன்புமணி பார்முலா
அப்போதும் கோதாவில் இறங்கிய அன்புமணி 3 தொகுதிகளை விட்டுக் கொடுக்கிறோம்.. ஒரு ராஜ்யசபா சீட் எனக்கு தாருங்கள் என்று பார்முலாவை உருவாக்கி இணக்கத்தை உருவாக்கினார். அது கை கொடுக்க இன்று வெற்றிகரமாக முதல் கட்ட "கூட்டணி' பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது.
சுதீஷ், பிரேமலதா
அதேபோல் தேமுதிகவை பாஜக கூட்டணிக்கு கொண்டு வந்ததில் யாருடைய முக்கிய பங்கு என்பது நாடறிந்ததுதான்... விஜயகாந்த் மனைவி பிரேமலதா, விஜயகாந்த் மச்சான் சுதீஷ்தான் தேமுதிகவை பாஜக அணியில் சேர்த்தவர்கள்.
இங்கும் ராஜ்யசபா சீட்..
பாமகவின் அன்புமணி கேட்பது போல நாங்கள் கேட்கிற தொகுதிகளில் ஒன்றிரண்டை விட்டுக் கொடுக்கிறோம்.. அதற்கு பலனாக குஜராத்திலோ உத்தரப்பிரதேசத்திலோ ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும்..என்பதுதான் தேமுதிகவின் கோரிக்கை. அந்த ஒரு சீட் வேறு யாருக்கு அங்கு மகன் அன்புமணிக்கு எனில்.. இங்கு மச்சான் சுதீஷுக்குத்தான்.
திமுகவிலும்..
இவர்கள் மட்டும்தானா? திமுகவில் காங்கிரஸ் கூட்டணியே கூடாது என்கிறார் கருணாநிதி மகன் ஸ்டாலின். ஆனால் கருணாநிதியின் மகள் கனிமொழி, பேரன் தயாநிதி காங்கிரஸுடன்தான் கூட்டணி அமைக்க வலியுறுத்திப் பார்த்தனர். ஆனால் ஸ்டாலினே வென்றவரானார்.