அடேங்கப்பா... "மிஸ்ட் கால்" கொடுத்து பாஜகவில் சேர்ந்த 1 லட்சம் பேர்... 20 நாளில்!
சென்னை: பாஜகவில் உறுப்பினர் சேர்க்கையை வினோதமாக நடத்தி வருகின்றனர். அதில் ஒரு வகையாக மிஸ்ட் கால் கொடுத்து உறுப்பினராகும் முறைக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதாம். கடந்த 20 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேர் இப்படி கட்சியில் சேர்ந்துள்ளனராம்.
பா.ஜ.கவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களும் 6 ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும்.
1-1-2009-ல் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களின் பதிவு அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. எனவே புதிய உறுப்பினர் சேர்க்கை, புதுப்பிக்கும் பணி ஆகியவை கடந்த 1-ம் தேதி தொடங்கியது. மார்ச் 31-ம் தேதி வரை இந்த பணிகள் நடைபெற உள்ளது.
தகவல் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கை முழுவதையும் இணைய தளம் மூலம் பா.ஜ.க கையாண்டு வருகிறது. மிஸ்ட் கால் மூலம் புதிய உறுப்பினர்களை சேர்க்க 180026620202 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இந்த எண் சமூக வலைத்தளங்கள், பத்திரிகை, தொலைக்காட்சி மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
உறுப்பினராக சேர விரும்புபவர்கள் இந்த எண்ணுக்கு மிஸ்ட்கால் கொடுத்தால் போதும். உடனே அந்த எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வரும். அதில் உள்ள எண்ணுக்குப் பெயர் மற்றும் முகவரியை எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ரூ.5 கட்டணத்தை வாங்கி கொண்டு கட்சி உறுப்பினர் அட்டையை வழங்குவார்கள் பாஜகவினர்.
உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக மாநில தலைவர்கள், அமைப்பு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், அமைப்பு செயலாளர் மோகன் ராஜுலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது மோகன்ராஜுலு கூறுகையில், மிஸ்ட் கால் மூலம் 20 நாளில் பா.ஜ.கவில் சேர 1 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்து எஸ்.எம்.எஸ். அனுப்பி இருக்கிறார்கள். உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஒன்றிய தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் பயிற்சி முகாம் இன்று (நேற்று) முதல் 30ம் தேதி வரை மாநிலம் முழுவதும் 11 இடங்களில் நடக்கிறது.
மிஸ்ட் கால் மூலம் உறுப்பினர்களாக சேர விருப்பம் தெரிவித்தவர்களை நேரில் சந்தித்து உறுப்பினர்களாக சேர்க்க ஒரு கிளை கமிட்டிக்கு ஒருவர் வீதம் 30 ஆயிரம் பேரை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு லட்சம் பேர் உறுப்பினராக சேர விருப்பம் தெரிவித்து இருப்பது எங்களை உற்சாகப்படுத்தியது. உறுப்பினர் சேர்க்கை அனைத்தும் உடனுக்குடன் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும்.
இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் இணைய தள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்றுபவர்கள், விவசாயிகள், பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பினரையும் உறுப்பினர்களாக சேர்க்க தனித்தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் மோகன்ராஜுலு.