நாளைய 'பந்த்'-க்கு மட்டுமே ஆதரவு.. போராட்டங்கள் அத்தனைக்குமே எதிர்ப்பு... அடடே 'தமிழிசை' #tnbandh
சென்னை: அரசியலிலில் இப்படியெல்லாம் ஒரு நிலைப்பாடு எடுத்து அதை பகிரங்கமாக அறிவிக்கவும் நிச்சயம் துணிச்சல் தேவை... விவசாய, வணிகர் சங்கங்கள் நடத்தும் நாளைய முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாரதிய ஜனதா ஆதரவை தெரிவித்துள்ளது. ஆனால் நாளை முழு அடைப்பின் போது மத்திய அரசுக்கு எதிராக நடத்தும் போராட்டங்கள் அனைத்தையும் எதிர்ப்பதாகவும் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள், அமைப்புடன் முழு அடைப்பு நாளை வெற்றிகரமாக நடைபெற உள்ளது. நாளை முழு அடைப்பின் போராட்டத்தின் போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு உள்ளிட்ட இயக்கங்கள் கண்டன முற்றுகைப் போராட்டங்கள் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.
இதனால் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்த பாஜக தற்போது பல்டி அடிக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளதாவது:
ஆதரவு
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதாகவும் கடை அடைப்புப் போராட்டம் அமையும் என்றால் எங்கள் ஆதரவு நிச்சயம் உண்டு. எந்த காலத்திலும் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முதல் கட்சியாக பாஜக இருந்து வந்துள்ளது.
எதிர்ப்பு
அரசியல் கண்ணோட்டத்துடன் மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட போவதாகவும், ரயில்களை மறிக்க போவதாகவும் சிலர் கூறி உள்ளனர். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
மத்திய அரசும் காவிரியும்
இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் காவிரி பிரச்சினையில் எந்த முடிவையும் எட்டாத நிலையில் இப்போதுதான் அந்த பிரச்சினை வந்தது போலவும் மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டது போலவும் சித்தரிக்க முயல்கிறார்கள். காவிரி பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.
உச்சநீதிமன்றம், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட பிறகும் தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு மறுத்தது. ஆனால் மத்திய நீர்வள அமைப்பு தேவையான தண்ணீர் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
காப்பாற்றியது ராஜ்நாத்சிங்
தமிழகத்துக்கு ஆதரவாகத்தான் மத்திய அரசு செயல்பட்டு இருக்கிறது. கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதும் துணை ராணுவ படையை அனுப்பி கலவரத்தை கட்டுப்படுத்தவும், தமிழர்களை காக்கவும் ராஜ்நாத்சிங் உடனடி நடவடிக்கை எடுத்தார். இப்படி தமிழர்களின் நலனுக்காக பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் போது எல்லா பழியையும் மத்திய அரசு மீது போடுவதை ஏற்க முடியாது. குழப்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல் சிலர் அரசியல் ஆதாயம் தேடி முயல்வதை கண்டிக்கிறோம்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.