தேமுதிக, பாமகவை மிரட்ட பாஜக கையிலெடுக்கும் அஸ்திரம் 'திமுகவுடன் பேச்சுவார்த்தை"?
சென்னை: கூட்டணிக்கு வர முரண்டுபிடிக்கும் தேமுதிக, பாமகவை மிரட்டுகிற வகையில் திமுகவுடன் பேச்சுவாரத்தை நடத்துகிறோம் என்கிற அஸ்திரத்தை பாஜக கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் அதிமுக, இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ்- பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தது. ஆனாலும் காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு சாத்தியம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பாரதிய ஜனதா இம்முறை ஒரு வலுவான கூட்டணியை அமைத்துவிட வேண்டும் என்ற முனைப்பை தொடக்கம் முதலே காட்டி வருகிறது. பாஜக தமது அணியில் தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளை இணைப்பதில் தீவிரம் காட்டியது.
பாஜக- மதிமுக பேச்சுவார்த்தை.. தேமுதிக தயக்கம்
இதில் பாஜக அணியில் மதிமுக இடம்பெறும் என்று அறிவித்து இரு கட்சியினரும் பேச்சுகளை நடத்தி வருகின்றனர். ஆனால் உளுந்தூர்பேட்டை மாநாட்டில் முடிவு அறிவிப்பேன் என்று சொன்ன தேமுதிக, அம்மாநாடு முடிந்து ஒருவாரமாகிவிட்ட நிலையிலும் கூட எதுவும் சொல்லவில்லை.
இழுபறி பாமக
அதேபோல் பாஜகவுடன் பேச்சுகளை நடத்திக் கொண்டிருந்த பாமகவும் எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமல் இருந்து வருகிறது. சென்னையில் நாளை நடைபெறும் மோடியின் கூட்டத்தில் எப்படியாவது கூட்டணிக் கட்சித் தலைவர்களை மேடையேற்றுவது என்ற பாஜகவின் கனவு நிறைவேறவில்லை.
தொகுதி பங்கீட்டு சிக்கலே காரணம்
இதற்கு காரணமாக சொல்லப்படுவது தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல்தான். கூட்டணியில் இணைய தே.மு.தி.க., பா.ம.க. ஆகியவை வைத்த கோரிக்கைகளும், நிபந்தனைகளும் பாஜகவை அதிர வைத்தனவாம்.
முதலில் கூட்டணி .. பின்னர் தொகுதி
இதனால் தொகுதி பங்கீட்டை பின்னர் பார்த்துக் கொள்ளலாம். முதலில் கூட்டணியை உறுதி செய்து மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ப வாருங்கள் என்று பாஜக அழைப்பு- விடுத்தது. அதனால்தான் வைகோவும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என முடிவு செய்து அறிவித்திருந்தார்.
தலா 9- தேமுதிகவுக்கு 13
ஆனால் கூட்டணியை உறுதி செய்யவே தே.மு.தி.க.வும், பா.ம.க.வும் தயங்கி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியபோது பாஜக, ம.தி.மு.க. பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா 9 தொகுதிகள் ஒதுக்கவும் மீதமுள்ள 13 தொகுதியில் தேமுதிகவுக்கு 12 தொகுதியும், புதுவை என்.ஆர்.காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டதாம். அதேபோல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டவைகளுக்கு கடைசி நேரத்தில் ஒன்றிரண்டு தொகுதிகளை விட்டு கொடுக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டதாம்.
5 தொகுதிகளில் மதிமுக உறுதி
ம.தி.மு.க. தரப்பில் விருதுநகர், ஈரோடு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, பொள்ளாச்சி ஆகிய 5 தொகுதிகளும் கண்டிப்பாக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
15 கேட்கும் பாமக
ஆனால் பாமக தரப்பு தங்களுக்கு 10 தொகுதிகளும் சமுதாய அமைப்புகளுக்கு 4 தொகுதியும் ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
20 கேட்கும் தேமுதிக
அதேபோல் தேமுதிகவும் 20 தொகுதிகள் கேட்டிருக்கிறது. இந்த அதிரடி நிபந்தனைகள்தான் பாஜக கூட்டணியை சிக்கலுக்குள்ளாக்கியது.
மோடி கூட்டத்தில் பங்கேற்பில்லை..
இந்த நிலையில் மோடி கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்ட வைகோ திடீரென அதில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறது மதிமுக.
கொளுத்திப் போட்டு...
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில்தான், திமுகவுடன் பாஜக ரகசியப் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்கிற செய்தியை கொளுத்திப் போட்டுள்ளனர்.
செய்தியின் பின்னணி?
பாஜகவை நீண்டகாலமாக ஆதரித்து வரும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தருக்கு சொந்தமானது புதிய தலைமுறை தொலைக்காட்சி. அந்த தொலைக்காட்சியே பாஜக- திமுக ரகசிய பேச்சுவார்த்தை நடத்துகிறது என செய்தி வெளியிடுவது பல சந்தேகங்களையும் எழுப்பாமல் இல்லை.
திமுக- பாஜக கூட்டணி அமைந்தால்...
அப்படி திமுக- பாஜக கூட்டணி அமைந்தால் மதிமுக, பாமக, தேமுதிக ஆகிய அனைத்து கட்சிகளுமே தனித்துப் போட்டியிட்டாக வேண்டிய நிலைக்குத்தான் தள்ளப்படும். இந்தக் கட்சிகள் நிச்சயமாக, அதிமுக- திமுக அணியில் இடம்பெறவும் வாய்ப்பு இல்லை.
மிரட்டும் அஸ்திரமா?
இதனால் இவற்றை மிரட்டும் வகையில் அல்லது வழிக்கு கொண்டு வரும் வகையில் இப்படி ஒரு செய்தியை கிளப்பிடுவது என பாஜக முடிவு செய்துள்ளதோ என்ற கேள்வியும் தேமுதிக, பாமக வட்டாரத்தில் எழுப்பப்படுகிறது.
மதிமுகவுக்கு தெரியுமா?
பாஜகவின் இந்த அஸ்திரம் பற்றி மதிமுக அறிந்திருக்கிறதா? இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் திமுக- பாஜக பேச்சுவார்த்தை என்ற செய்தியை மதிமுக தரப்பு ரசிக்கவில்லை என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழக தேர்தல் களம் நாள்தோறும் பரபரத்துக் கொண்டுதான் இருக்கிறது.