கொடும்பாவி எரிப்பது என்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை- நீதிபதி ராமசுப்பிரமணியன் தீர்ப்பு
சென்னை: கொடும்பாவி எரிப்பது என்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.சந்தோஷ் யாதவ் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், சட்டப்படிப்பை முடித்து விட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழக்கறிஞராக பதிவு செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் விண்ணப்பம் செய்தேன். ஆனால் என் மீது விழுப்புரம் மாவட்டத்தில் கொடும்பாவி எரித்த வழக்கு நிலுவையில் உள்ளது என்று காரணம் கூறி என் விண்ணப்பத்தை பார் கவுன்சில் நிராகரித்துவிட்டது. ஆகையால் இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், கே.ரவிசந்திரபாபு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 285-ன் கீழ் மனுதாரருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவு, தீ மற்றும் எரிபொருட்கள் மூலம் பொதுமக்களுக்கு காயத்தை உருவாக்குதல் அல்லது அபாயத்தை ஏற்படுத்தல் குற்றம் என்று கூறுகிறது.
இந்த சட்டப்பிரிவை கவனத்துடன் பரிசீலிக்கும்போது, கொடும்பாவியை எரிப்பது என்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே கொடும்பாவி எரிப்பதற்கு தண்டனை எதுவும் இல்லாததால், தீ மற்றும் எரிபொருட்கள் மூலம் பொதுமக்களுக்கு காயம், அபாயம் ஏற்படுத்துதல் என்ற சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
கொடும்பாவி எரிப்பது என்பது இந்தியாவில் 17-ம் நூற்றாண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. அதாவது துளசிதாசரின் சீடர் மேகா பகத், 17-ம் நூற்றாண்டில் ராம்லீலா நிகழ்ச்சியை நடத்த தொடங்கினார். தற்போது நாடு முழுவதும் இந்த நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளில் தீமை அழிந்து நன்மை வெற்றி பெறுவதை காட்டும் விதமாக ராவணனின் கொடும்பாவி எரிக்கப்படுகிறது.
எனவே, கொடும்பாவி எரிப்பது என்பது சட்டப்படி குற்றம் இல்லை. அதனால், மனுதாரர் மீதான வழக்கின் அடிப்படையில் அவர் குற்றப்பின்னணி கொண்ட நபர் என்று கூற முடியாது. இந்த மனுவை ஏற்றுக்கொள்கிறோம். அவரது விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.