தமிழகம் முழுக்க 2வது நாளாக தொடரும் அரசு பஸ் வேலை நிறுத்தம்.. பயணிகள் அவதி
சென்னை: இன்றும் 2வது நாளாக தமிழகம் முழுக்க பஸ் வேலை நிறுத்தம் தொடருகிறது.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்று தமிழகமெங்கும் பேருந்து சேவை பெருமளவு பாதிக்கப்பட்டது. அரசு பஸ்கள் இயங்காததால் அலுவலகங்களுக்குச் செல்பவர்களும், கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.

நேற்று காலையைவிட குறைவாக இரவில் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பணி முடித்துவிட்டு வீடுகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பஸ் நிலையத்திலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. வேலை நிறுத்தம் எதிரொலியாக தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
இதனிடையே, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை மீறி நேற்று இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் மீது பல்வேறு இடங்களில் கல் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதால் பதற்றம் நிலவியது. அரசு பேருந்துகள் போதிய அளவில் இயங்காததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இதனிடையே இன்றும் தமிழகம் முழுக்க பஸ் வேலை நிறுத்தம் தொடருகிறது. வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications