விஜயகாந்துக்கு ஏன் நெஞ்சு எரிச்சல் வந்துச்சு தெரியுமா?
சென்னை: தமிழக அரசியல் களத்தில் அதகளம் கிளப்புவது என்றால், அது விஜயகாந்த்தான். தோத்தாலும் ஜெயித்தாலும் கலக்குவோம்ல என்று களமிறங்கிவிடுவார் விஜயகாந்த்.
என்ன பேசினாலும் மீடியால போடுறாங்களே... எந்த பேப்பரையும் படிக்காதீங்க, கேப்டன் டிவி தவிர வேறு எதுவும் பார்க்காதீங்க என்று உத்தரவிடுவதற்காகவே உங்களுடன் நான் என்று தொண்டர்களை சந்தித்து போட்டோ எடுத்து அனுப்பிவைத்தார் விஜயகாந்த்.
தலைவரை நேரில் பார்த்து போட்டோ எடுத்ததே பிறவிப் பயன் அடைந்த புண்ணியம் என்று புளங்காகிதம் அடைந்துள்ளனர் தேமுதிக தொண்டர்கள்.
கடந்த ஒருவாரமாக தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த் திடீரென்று நெஞ்சு எரிச்சல் வந்து மருத்துவமனையில் படுத்துவிட்டார். அப்படி என்னதான் நடந்தது தொண்டர்கள் சந்திப்பில் என்று விசாரித்தபோது பல விசயங்கள் தெரியவந்தன.
சுனாமியிலும் ஸ்விம்மிங்
லோக்சபா தேர்தல் தோல்வி, வாக்கு வங்கி சரிவு... என தேமுதிகவை சுனாமி சுழற்றியடித்தாலும் ஸ்விம்மிங் அடிப்போம்ல என்று தெம்போடு 'உங்களுடன் நான்' எனக் கட்சித் தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தார்.
திருவிழாக்கூட்டம்
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகரை காணவரும் கூட்டம் போல விஜயகாந்தைக் காண குவியல் குவியலாக தொண்டர்கள் குவிந்தனர். கேப்டனோட போட்டோ எடுக்கப்போறோம் என்பதே இந்த உற்சாகத்திற்குக் காரணம்.
சும்மா தக தக தக...
விஜயகாந்தைக் காண பவுடர் பூசிய முகமும் பளிச் தோற்றமுமாக வெள்ளை வெளேர் என்று தொண்டர்கள் காத்திருக்க, ஏன் இப்படி என்று விசாரித்தால், கேப்டன் சும்மா தக தகன்னு இருப்பாரு. அவரு பக்கத்துல நிக்கும் போது நாமாளும் நல்லா தெரியணுமே என்று கூறி சிரிக்கின்றனர்.
தொண்டர்கள் உற்சாகம்
கேப்டனை காரை கண்ட நொடியே உற்சாகத்தோடு டச்அப் செய்து கொள்கின்றனர். மண்டபத்திற்கு நுழைந்து கேப்டன் தரிசனம் முடிந்த உடன் பயபக்தியோடு வெளியே வருகின்றனர்.
என்னதான் நடந்தது
உள்ளே என்னதான் பேசுகிறார் கேப்டன் என்று விசாரித்தால், 'மூணு, நாலு பேரா வரச் சொல்லி போட்டோ எடுத்துக்கிட்டார். வேற எதுவும் பேசலை. மனுவையும் வாங்கலை' என்று கூறினார்.
தேர்தல்ல தூங்கிறாதே
ஒரு தொண்டரிடம் 'என்னய்யா முகம்லாம் பளிச்னு இருக்கு?'னு கேட்டார் விஜயகாந்த். 'போட்டோல முகம் பளிச்னு இருக்கணும்னு தூங்கி எந்திருச்சு வர்றேன் கேப்டன்'னு அவர் சொல்ல, 'இதே மாதிரி தேர்தல் நேரத்துல தூங்கிராதய்யா'னு கேப்டன் சிரிச்சுக்கிட்டே சொன்னாராம்.
அதெல்லாம் நம்பாதீங்க
பத்திரிகையில என்னைப் பத்தி எல்லாம் தப்புத் தப்பா எழுதுறாங்க. அதெல்லாம் நம்பாதீங்க' என்று அட்வைஸ் சொல்லியும் அனுப்பியுள்ளார் கேப்டன்.
பிரியாணி வேண்டாம்பா
தேர்தல் பிரசாரத்தின்போது வேலூர் வந்திருந்த விஜயகாந்துக்கு, ஆம்பூர் பிரியாணி கொடுத்திருக்கிறார்கள். அப்போது அதைப் பற்றி 'ஆஹா... ஓஹோ'வெனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அதனால் இந்த முறையும் 'ஹாட் பாக்ஸில்' சுடச்சுட ஆம்பூர் பிரியாணி தயாராக வைத்திருந்தார்கள். ஆனால், 'பிரியாணி வேண்டாம்' என்று சொன்ன கேப்டன் தயிர் சாதம் மட்டுமே சாப்பிட்டாராம் விஜயகாந்த்.
குடும்ப உறுப்பினர்களை சேருங்க
மண்டபத்துக்குள் நுழைந்த விஜயகாந்த், எடுத்த எடுப்பிலேயே ஆக்ரோஷமானார். கட்சி வளரணும்னா, குடும்ப உறுப்பினர்கள் கட்சிக்குள்ள வரணும். மாசம் புதுசா ஆயிரம் பேரை கட்சியில சேர்த்தாதான், மாவட்டம் சிறப்பா இருக்கும் என்றாராம்.
எவ்வளவு வேலை செய்யறேன்
ஒரு வருஷம் தேர்தல் வேலை, இப்போ என் பையன் நடிக்கிற 'சகாப்தம்' படத்துக்கு ஸ்டோரி டிஸ்கஷன், அப்புறம் ஷூட்டிங் லொகேஷன் பார்க்க மலேசியா போனேன், இப்போ உங்களைப் பார்க்க வந்திருக்கேன். இப்படி எவ்வளவு வேலை பார்க்கிறேன். ஆனா, 'விஜயகாந்த் ஒண்ணுமே பண்றதில்லை'னு பத்திரிகைல எழுதுறாங்க!'' என்று குமுறினாராம் பின்னர் போட்டோ எடுத்துக்கொண்டாராம்.
கால்ல விழக்கூடாது
கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி, ஒருகட்டத்தில் ஏகத்துக்கும் உஷ்ணமாகி, ''டேய்... கேப்டன் கையைப் பிடிக்கக் கூடாது. கேப்டன் கால்ல விழக் கூடாது உத்தரவிட்டாராம். முன்னரே சொல்லப்பட்ட கட்டளையையும் மீறி ஆர்வக்கோளாறு தொண்டர் ஒருவர் விஜயகாந்த் காலில் விழ, முதுகில் படீர் என அறை விழுந்ததாம்.
தூக்கி போட்டுடுவேன்
கேப்டன் மூஞ்சியை எதுக்குடா பார்க்குற... கேமராவைப் பாருடா... ரொம்பப் பண்ணினா, மாடியில் இருந்து தூக்கிப் போட்ருவேன்' என்று மிரட்டினாராம் பார்த்தசாரதி.
அண்ணி வரலையே
''கேப்டனோட போட்டோ எடுத்தது சந்தோஷம்தான். ஆனா அண்ணியைப் பார்க்க முடியலையே!'' என்று வருத்தப்பட்டுள்ளனர் தொண்டர்கள்.
மதுவாடையே வரக்கூடாது
திருவண்ணாமலை மண்டப. வாசலில் நின்ற தொண்டர்களின் வாயை ஊதிக்காட்டச் சொல்லி 'பழ வாசனை' சோதனையும் மேற்கொண்டார்கள். 'நிகழ்ச்சி நடக்கிற இடத்துக்குப் பக்கத்துல டாஸ்மாக் இருக்கக் கூடாது' என்பது விஜயகாந்தின் கண்டிப்பான உத்தரவாம். அதனாலேயே ஊரில் இருந்து ஒன்றரைக் கிலோ மீட்டர் தள்ளி அந்த மண்டபத்தைத் தேர்வு செய்தார்களாம்.
கட்சியை அடகு வைக்கமாட்டேன்
'மத்த கட்சிகளோட இனிமே கூட்டணி வெச்சா, அது உங்களை நான் அடகு வைக்கிற மாதிரி. இனி ஒரு நாளும் நான் உங்களை அடகுவைக்க மாட்டேன். நீங்க நம்ம கட்சியைப் பலப்படுத்தணும். அதுக்கு உங்க குடும்பத்துல இருக்கிற எல்லோரையும் நம்ம கட்சியில உறுப்பினரா மாத்துங்க என்று கேட்டுக்கொண்டு ''வாங்க போட்டோ எடுத்துக்கலாம்'' என்று அழைத்தாராம்.
போட்டோ எடுத்ததே சந்தோசம்தான்
ரசிகர் மன்றம் கட்சியா மாறின பின்னாடி, பணக்காரங்களுக்கு மட்டும்தான் முன்னுரிமை, கட்சிப் பதவி கிடைச்சது. எங்களை மாதிரி அடிமட்டத் தொண்டன் அப்படியேதான் இருக்கான் என்கின்றனர் உழைக்கும் தொண்டர்கள். அதனால என்ன பரவாயில்லை... தலைவரோட போட்டோ எடுத்துக்கிட்டதே பெரிய சந்தோஷம்தானே!'' என்பது தொண்டர்களின் சந்தோசமாக இருக்கிறது.
மண்டபம் டூ மருத்துவமனை
தொண்டர்களை சந்தித்த கையோடு மருத்துவமனையில் போய் சிகிச்சை எடுத்துக்கொண்டர் விஜயகாந்த். ஏற்கனவே இருந்த நெஞ்சு எரிச்சல் அதிகமாகவே அதற்கு சிகிச்சை எடுத்தார் விஜயகாந்த். அங்கே கோபத்தை குறைப்பது எப்படி என்ற புத்தகத்தைக் கொடுத்து படிக்கச் சொன்னாராம் டாக்டர்.
கட்சி கட்டுப்படுமா?
எது எப்படியோ 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன் கட்சித் தொண்டர்களையும், எம்.எல்.ஏக்களையும் கேப்டன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால் சரிதான்.