ஆத்துல வெள்ளம் வந்துச்சா-..... அப்போ கார் போச்சா.... தண்ணில அடிச்சிட்டு போயிருச்சுப்பா....
சென்னை: கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட... தரைப்பாலங்களின் தலைவிதி எல்லாம் ஒரே நாளில் முடிந்து விட்டது. அத்தனையும் வாரி சுருட்டிக்கொண்டு கடலில் கலந்து கொண்டிருக்கிறது தண்ணீர். இது தெரியாமல் தண்ணி தானே என்ன செய்யப்போகுது என்று அசால்டாக பாலம் இருக்கிற நினைப்பில் வெள்ளத்தை கடக்க நினைக்கும் வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதான் பரிதாபமாக இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்துள்ளது. சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நாராயணபுரம் பகுதியில் உள்ள தரைப்பாலம் அடித்து செல்லப் பட்டது. இதனால், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ் சாலையில், திருவள்ளூர்- திருத்தணி மார்க்கத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதே போல், ஆரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் மழை நீரில், ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால், ஊத்துக் கோட்டை- திருவள்ளூர் சாலை யில் போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது.
வெள்ளத்தோடு போன கார்
திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றின் வெள்ளத்தில் நேற்று கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. காரில் இருந்த 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 70 வயது முதியவர் ஒருவர் உயிரிந்தார். ஆந்திர மாநிலம் எல்.சமுத்திரத்தைச் சேர்ந்த 6 பேர் கந்த சஷ்டியைமுன்னிட்டு நேற்று திருத்தணி முருகன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். என்.என்.கண்டிகை அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது, தரைப்பாலம் திடீரென இடிந்தது. கரைபுரண்டு ஓடிய ஆற்று வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட, அதில் இருந்த 5 பேரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்டவர்களில் ஒரு பெண்ணும், ஒரு குழந்தையும் அடங்குவர். காருடன் அடித்துச் செல்லப்பட்ட கோதண்டம் என்ற 70 வயது முதியவர் உயிரிழந்தார். இதேபோல இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், அடித்துச் செல்லப்பட்டு ஒருவழியாக நீந்தி கரை சேருகின்றனர்.