கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக ராஜா மீது வழக்கு.. உயர்நீதிமன்றக் கிளையில் போலீஸ் தகவல்
சென்னை: மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக சென்னை காவல்துறையினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளனர்.
மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த அப்துல் கபூர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு மனு செய்திருந்தார். அதில், எச்.ராஜா, கடந்த ஜனவரி 4ஆம் தேதி சென்னையில் இந்து தர்ம பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார், முஸ்லிம், கிருஸ்தவர்களை குறித்து தவறாக பேசியுள்ளார்.
இந்த பேச்சுக்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது பேச்சு வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் தனபாலன், வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் எச்.ராஜா பேச்சு குறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் இதே பொதுக்கூட்டம் குறித்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி பூங்குன்றன் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் சட்டம் ஒழங்கு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எச்.ராஜா மீது மதம், இனம், மொழி, ஜாதி குறித்த விரோத உணர்ச்சியை தூண்டிவிட முயற்சிப்பதாக கடந்த அக்டோபர் 1ஆம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளார் என்று தெரிவித்ததாக கூறப்பட்டது.
அரசு தரப்பில் பதில் மனு அளித்துள்ளதால் இத்துடன் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.