எல்.கே.ஜி. புத்தகத்தில் உதயசூரியன் சின்னம்: அகற்றக் கோரி ஹைகோர்ட்டில் வழக்கு
சென்னை: தமிழகத்தில் உள்ள எல்.கே.ஜி. பாடப் புத்தகத்தில் இருக்கும் உதயசூரியன் படத்தை அகற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புரட்சி சுரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எல்.கே.ஜி. பாடப் புத்தகத்தில் ஆங்கில எழுத்துகளை அறிமுகப்படுத்துவதற்காக ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு படம் வரையப்பட்டுள்ளது. S என்ற எழுத்தை அறிமுகப் படுத்தும் இடத்தில் SUN என்று எழுதப்பட்டு, சூரியன் கண்ணாடி அணிந்திருப்பதுபோல ஒரு படம் வரையப்பட்டுள்ளது. அந்த படம் தமிழகத்தின் ஒரு அரசியல் கட்சித் தலைவரைப்போல உள்ளது.
அதேபோல, அதிகாலையில் சூரியன் உதிப்பது, சேவல் கூவுவது ஆகியவை தொடர்பாக விளக்கக்கூடிய ஒரு பக்கத்தில் உதயசூரியன் சின்னம் வரையப்பட்டுள்ளது. மழலைக் குழந்தைகளிடத்தில் அரசியல் கருத்துகளைத் திணிப்பதாக உள்ள இச்செயல் சட்ட விரோதமானது. எனவே, எல்.கே.ஜி. பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த பக்கங்களை வரும் கல்வியாண்டுக்கு முன்பு அகற்ற தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே. அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை வரும் 3ம் தேதிதிக்கு ஒத்தி வைத்தனர்.