புதுச்சேரி முழுஅடைப்பு வெற்றி - சித்தராமைய்யா உருவபொம்மை எரிப்பு
புதுச்சேரி: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் அமைதியாக நடந்து முடிந்தது. மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் கடைகள் மூடப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் தமிழ் அமைப்பினர் சித்தராமைய்யாவின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 6 மணிக்கு பந்த் முடிவடைந்ததை அடுத்து கடைகள் திறக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியது.
காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம்- புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் ஆதரவு அளித்தன.
புதுச்சேரியில் முழு அடைப்பு புதுச்சேரியில் காலை 6 மணிமுதல் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டன. தனியார் பஸ்கள், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 6 மணிக்கு மேல் முழு அடைப்பு முடிந்த பின்னர் போக்குவரத்து சீரடைந்தது.
|
முழுஅடைப்பு வெற்றி
அரசு பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுநல இயக்கங்கள், தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. போராட்டத்தின்போது சித்தராமைய்யாவின் உருவபொம்மையை எரித்து கண்டன முழுக்கங்களை பல்வேறு அமைப்பினர் எழுப்பினர். 6 மணிக்கு மேல் புதுச்சேரி இயல்பு நிலைக்குத் திரும்பியது.
சாலை மறியல்
புதுச்சேரி - கடலூர் சாலையில் அரியாங்குப்பம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் டயர்களை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தை நோக்கி புறப்பட இருந்த அரசு பேருந்தை மறித்து பாஜகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழர்களுக்கு நீதி வேண்டும்
கர்நாடக அரசைக் கண்டித்து இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், காவிரி நீர் தேசிய சொத்து, அதில் தமிழகம், புதுச்சேரிக்கும் உரிமை இருக்கிறது என்றும் பாஜகவினர் தெரிவித்தனர். மக்களின் வாக்குகளைப் பெற அங்கு காங்கிரஸ் கட்சியினர் வன்முறையை தூண்டுவதாகவும் தெரிவித்தனர்.
சித்தராமைய்யா உருவபொம்மை எரிப்பு
நெல்லித்தோப்பு பகுதியில் சித்தராமைய்யாவின் உருவபொம்மையை எரித்தும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் போராட்டத்தில் பங்கேற்காத பாஜகவினர் புதுச்சேரியில் நடைபெற்று வரும் போராட்டங்களில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்காங்கே ஆர்பாட்டங்கள் நடைபெற்றாலும் அமைதியான முறையில் முழுஅடைப்பு நடைபெற்றதால் புதுச்சேரி போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.