புறக்கணிக்கப்படும் புதுச்சேரி... வெள்ள நிவாரணத் தொகை இன்னும் வரவில்லை.. நாராயணசாமி
சென்னை: வெள்ள நிவாரணம் வழங்குவதில் புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு புறக்கணித்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை காங்கிரஸ் கட்சியினர் முடக்கியதாக பாஜக கூறிவருவது வேடிக்கையாக உள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது பல்வேறு காரணங்களைக் கூறி பாஜக.,வினர் நாடாளுமன்றத்தை முடக்கினர்.
ஆனால் காங்கிரஸ் கட்சி, உண்மையான மக்கள் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் முன் வைக்கிறது. சகிப்பின்மை விவகாரம், விலைவாசி உயர்வு, டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு உள்ளிட்ட பிரச்சனைகளை விவாததிக்க காங்கிரஸ் அனுமதி கேட்கிறது. ஆனால் தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. ஊழல் விவகாரத்தில் பாஜக.,வின் நிலைப்பாட்டை தொடர்ந்து கண்டித்து வருகிறோம், நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும் என்ற எண்ணம் காங்கிரசுக்கு இல்லை.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுவைக்கு ரூ.200 கோடி கேட்டு மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதினேன். முதல்வர் ரங்கசாமி தாமதமாக கடிதம் எழுதினார். ரூ.50 கோடி நிவாரணத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அந்த தொகையும் இதுவரை வந்து சேரவில்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகையாக குடும்ப அட்டைக்கு தலா ரூ. 4000 அரசு ஊழியர்கள் வைப்பு நிதியிலிருந்து என்.ஆர்.அரசு கொடுத்து வருகிறது. ஆனால் அந்த தொகை பாதிக்கப்பட்ட மக்களை இதுவரை முழுமையாக சென்று சேரவில்லை. மத்திய பாஜக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை என்.ஆர் காங்கிரஸ் தந்து வருகிறது. இருப்பினும் புதுவை மாநிலத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்றார்.