நீட்.. தமிழக மாணவர்களின் கனவு நொறுங்கியது.. மத்திய அரசு கை விட்டது!
மத்திய அரசு கைவிட்டதால் தமிழக மாணவர்களின் மருத்துவபடிப்பு கனவு நொறுங்கி போனது.
சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும்... எப்படியும் மருத்துவ படிப்பில் சேர்ந்துவிடலாம் என்ற தமிழக மாணவர்களின் கடைசி நம்பிக்கையும் மத்திய அரசு கைவிரித்ததால் நொறுங்கிப் போனது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு பேரிடியானது. மாநில பாடத்திட்டத்தில் கட் ஆப் 198 வைத்திருந்தவர்களால் கூட நீட் தேர்வில் போதுமான மதிப்பெண்களை பெற முடியாமல் போனது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக மாணவர்கள் கொந்தளித்து போயிருந்தனர். இதனால் தமிழக அரசு, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தது.
நிர்மலா சீதாராமன்
இந்த ஆலோசனையின் முடிவு தெரியாமல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் மத்திய அரசு ஒப்புதல் தரும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அவசர சட்ட வரைவு
இது தமிழக மாணவர்களுக்கு நிம்மதி பெருமூச்சை கொடுத்தது. தமிழக அரசும் ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசர சட்ட வரைவை உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தது.
சட்ட அமைச்சகம் ஒப்புதல்
உள்துறை அமைச்சகமோ, சட்ட அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகங்களின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதில் சட்ட அமைச்சகம் மட்டுமே ஒப்புதல் தெரிவித்திருந்தது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு...
இதனிடையே நீட் தேர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீட்டை ஆதரிக்கும், எதிர்க்கும் மாணவர்கள் இருதரப்பின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.
கைவிரித்த அரசு- நொறுங்கிய கனவு
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில், தமிழக அரசின் ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் இல்லை என கைவிரித்துவிட்டது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த திடீர் முடிவால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நொறுங்கிப் போய்விட்டது.