என் இனிய தமிழ் மக்களே மறக்காம குடை எடுத்துட்டுப் போங்க... இன்னைக்கு மழை பெய்ய வாய்ப்பிருக்காம்!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆரம்பத்திலேயே கொஞ்சம் காலை வாரிய நிலையில், கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. அதன் தாக்கமாக தமிழக எல்லை பகுதிகளில் உள்ள கோவை, கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
அதிக புளுக்கம் காணப்பட்ட சென்னை உள்பட சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பசலன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் கூறியிருப்பதாவது :-
அடடா மழைடா... அடை மழைடா !
கடலோர கர்நாடகா, கேரள பகுதிகளில் மழை பெய்து வருவதால் அதன் தாக்கமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
சென்னைக்கு மேகமூட்டம் தான்...
சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தரைக்காற்று வழக்கமாக வீசுவதை விடவும் சற்று பலமாக வீசும்.
சராசரி மழையளவு...
ஜூன்-ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக நமக்கு 10 செ.மீ. அளவு மழை பதிவாகவேண்டும். ஆனால் தற்போது 9 செ.மீ. அளவு மழையே பதிவாகி உள்ளது. ஒரு செ.மீ. அளவுதான் குறைவு. இது சராசரியான அளவு மழைதான்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நேற்றைய மழை நிலவரம்...
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நடுவட்டம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, கோவை மாவட்டம் சின்னகலார் பகுதியில் தலா 2 செ.மீ. மழையும், நீலகிரி மாவட்டம் ‘ஜி' பஜார் பகுதியில் ஒரு செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.