மவுலிவாக்கம் விபத்து: விடைபெற்ற மீட்புக் குழு- 7 நாட்களில் 39,500 சாப்பாடு பொட்டலங்கள் வினியோகம்
சென்னை: சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து நடைபெற்ற இடத்தில் 7 நாட்களாக நடைபெற்ற மீட்புப்பணிகள் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றதை அடுத்து மீட்புக்குழுவினர் முகாமிற்கு திரும்பினர்.
கடந்த 7 நாள்களாக மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புக் குழுவினருக்கும், பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கும் சுமார் 39,500 சாப்பாட்டுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் 28-ஆம் தேதி மாலை இடிந்து விழுந்த 11 மாடிக் கட்டிடத்தின் மீட்புப் பணியில் சுமார் 1,500 பேர் ஈடுபட்டனர். இவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, குளுகோஸ், மருந்து ஆகியவற்றை வழங்கும் பொறுப்பை வருவாய்த்துறை ஏற்றிருந்தது. இதேபோல, கட்டட விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு வழங்கும் பொறுப்பையும் வருவாய்த்துறை செய்திருந்தது.
8000 தண்ணீர் பாக்கெட்டுகள்
கடந்த 7 நாள்களில் சுமார் 8 ஆயிரம் தண்ணீர் பாக்கெட்டுகள், அரைலிட்டர் தண்ணீர் பாட்டில்கள் 2 ஆயிரம், ஒரு லிட்டர் பாட்டில்கள் ஆயிரமும் விநியோகிகப்பட்டுள்ளன.
39500 சாப்பாடு பொட்டலங்கள்
7 நாள்களிலும் மொத்தம் 39,500 சாப்பாட்டு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவே வழங்கப்பட்டது.
இட்லி, பொங்கல் வடை
இதில், காலை உணவாக 7 நாள்களும் இட்லி வடை, பொங்கல், பூரி ஆகியவையும், மதியம் சாம்பார் சாதம், வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம் ஆகியவையும், இரவு இட்லி, சப்பாத்தி, தோசை ஆகியவையும் வழங்கப்பட்டன.
சுகாதாரமான உணவு
இதில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, கமாண்டோ வீரர், பெருநகர காவல்துறையினர் ஆகியோர் வருவாய்த்துறை விநியோகம் செய்யும் சாப்பாட்டுப் பொட்டலங்களே வாங்கி சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அரசு அதிகாரிகள் உத்தரவு
பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டுநிறுவனங்களும் உணவுகளை வழங்கினர். இந்த உணவு சுகாதாரமாக சமைக்கப்பட்டதற்கான உத்தரவாதம் இல்லாததால், மீட்புக்குழுவினருக்கு அரசு அதிகாரிகள் இவ்வாறு உத்தரவிட்டிருந்தனர்.
மீட்புப்பணி நிறைவு
கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணியும், மீட்புப் பணியும் வெள்ளிக்கிழமை காலை நிறைவு பெற்றதையடுத்து, மீட்புக் குழு படிப்படியாக வெளியேறியது. இதில், மீட்புப் பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, கமாண்டோ வீரர்கள் ஆகியோர் அடுத்தடுத்து ரோல்கால் செய்தனர்.
நினைவு புகைப்படம்
பின்னர், அங்கிருந்த உயர் அதிகாரிகளுடன் வீரர்கள் சம்பவ இடத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதிகாரிகளும் சளைக்காமல் அவர்களுடன் காலை 8 மணிக்குத் தொடங்கி நண்பகல் 1 மணி வரை புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
முகாமிற்கு சென்ற மீட்புக்குழுவினர்
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கடந்த ஒரு வாரத்தில் பழக்கமான நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தனர். இதையடுத்து அவர்கள், தங்களது வாகனங்களில் ஏறி முகாமுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.