சென்னை கோவை இடையே வந்தாச்சு வந்தே பாரத் ரயில்.. எப்போது தொடங்கும்! பயண நேரம் எவ்வளவு! முழு விவரம்
நாடு முழுக்க இப்போது 10 ரூட்களில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை: தலைநகர் சென்னைக்கும் கோவைக்கும் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதை பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைக்க உள்ளார்.
உலகிலேயே மிக பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக இந்திய ரயில்வே இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய ரயில்வே பல நவீன மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து வருகிறது.
அதிலும் குறிப்பாக வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வேவுக்கு புதிய பூஸ்ட் அளித்து உள்ளது. இந்த ரயில்கள் பொதுமக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாளை இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்.. சென்னை ரசிகர்களுக்கு நல்ல ஆபர்.. மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
வந்தே பாரத்
இது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ரயில்கள் ஆகும். முதலில் இவை சென்னையில் இருக்கும் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட்டன. கடந்த 2019ஆம் ஆண்டு முதல்முறையாக இந்த வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ரயிலுடன் இணைந்து என்ஜின், தானியங்கி கதவுகள், ஏசி, வைஃபை, பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளன.
10 ரூட்கள்
ஏற்கனவே, இப்போது நாடு முழுக்க 10 ரூட்களில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல்- பெங்களூரு- மைசூர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். நாடு முழுக்க பல்வேறு ரயில் தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏற்ற வழித்தடங்கள் கண்டறியப்பட்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை கோவை வந்தே பாரத்
இதற்கிடையே சென்னை முதல் கோவை வரை வந்தே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இதனை வரும் ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். ஏற்கனவே சென்னை மைசூர் இடையே வந்தே பாரத் உள்ள நிலையில், இது இரண்டாவது வந்தே பாரத் ரயிலாக இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இந்த ரயில் சேவையைத் தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற ரயில்கள்
இப்போது, சென்னை-கோவை இடையே பகல் நேரத்தில் இரண்டு சூப்பர் எக்ஸ்பிரஸ் ரயில்களும், ஒரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இது தவிர மற்ற எக்ஸ்பிரஸ்களும் இரு நகரங்களுக்கு இடையே பயணிக்கிறது. இப்போது சென்னை மற்றும் கோவைக்கு இடையே 495 கிமீ தூரத்தைக் கடக்க 7.50 மணி நேரம் வரை ஆகிறது. சதாப்தி ரயில் 7 மணி நேரத்தில் இரு நகரங்களையும் இணைக்கிறது. சதாப்தி ரயில் 5 நிலையங்களில் நிற்கும் நிலையில், வந்தே பாரத் கிட்டத்தட்ட அதே வழித்தடத்தில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறையும் பயண நேரம்
இந்த வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து கோவைக்கு 6 முதல் 6.30 மணி நேரத்தில் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "சென்னை - ஜோலார்பேட்டை இடையே தண்டவாளங்களில் பணிகள் நடந்து வரும் நிலையில், அங்கு ரயில் வேகம் மணிக்கு 130 கி.மீ ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் சென்னை - ஜோலார்பேட்டை (214 கி.மீ.) பாதையில் செல்லும் ரயில்களின் பயண நேரம் 10 முதல் 15 நிமிடங்கள் வரை குறையும். இதன் மூலம் சென்னை- கோவை இடையேயான பயண நேரமும் 7 மணி நேரத்திற்கும் கீழாகக் குறையும்" என்றார்.
மற்ற விவரங்கள்
இது சேலம், திருப்பூர் உள்ளிட்ட 5 ரயில் நிலையங்களில் நின்று செல்ல வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் கட்டண விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, தமிழ்நாட்டில் அடுத்து சென்னையில் இருந்து மதுரை அல்லது கோவைக்கு வந்தே பாரத் இயக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படியே இப்போது கோவைக்கு வந்தே பாரத் இயக்கப்படுகிறது. அதேபோல பிரதமர் மோடி தாம்பரம்-செங்கோட்டை இடையேயான எக்ஸ்பிரஸ் ரயிலையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார். பிரதமர் மோடியின் சென்னை வருகை குறித்த முழு விவரங்கள் வரும் காலங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.