ஆர்.கே. நகரில் விதிமீறலா?- புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள்
ஆர்.கே.நகரில் தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: ஆர்.கே.நகரில் தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து ஆர்.கே நகர் தொகுதி காலியாக உள்ளது. இதனையடுத்து வருகிற ஏப்ரல் 12ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. ஆர்.கே நகரில் போட்டியிட அதிமுக மற்றும் திமுக தங்களின் கட்சி வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது. மேலும் சிறிய கட்சிகள் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தேர்தல் விதிமீறல் நடந்தால் புகார் தெரிவிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சிகள் 📞 1800-4257012 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆர் கே நகர் பகுதிகளில் தேர்தல் நன்னடத்தை விதிகள் முழுமையாக அமலில் உள்ளது. மேலும் இடைத்தேர்த்லில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க, 3 பறக்கும் படைகளும், 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 2 வீடியோ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது