சென்னை வெள்ளம்... இழப்பீடு வழங்கியதில் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு ரூ. 5000 கோடி நஷ்டமாம்!
சென்னை: சென்னை உடபட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கியதில், இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு சுமார் ரூ. 5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.
கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தொடர்ச்சியாக கொட்டித் தீர்த்த கனமழையால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பலத்த சேதத்தைச் சந்தித்தன. அதிலும் குறிப்பாக டிசம்பர் மாதம் 1 மற்றும் 2ம் தேதிகள் பெய்த கனமழையில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது.
வெள்ளத்தில் சிக்கி, முன்னூறுக்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பெரும்பாலான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியது. இதனால் அந்த வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்கள் பாழாகின.
நீரில் மூழ்கிய வாகனங்கள்...
இதேபோல், வெள்ளத்தில் மூழ்கி இருசக்கர வாகனங்கள், கார்கள் உட்பட சுமார் 80 ஆயிரம் வாகனங்கள் சேதமடைந்தன. இதனால், விலையுயர்ந்த கார்களும் மலிவு விலைக்கு விற்கப்பட்டன.
வெள்ள நிவாரணம்...
வெள்ள நிவாரணமாக அரசு வெறும் ரூ. 5 ஆயிரத்தை மட்டுமே அளித்தது. இது யானைப் பசிக்கு சோளப்பொறியாக மாறியது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் தங்கள் பொருட்களுக்கு இழப்பீடு கேட்டு விண்ணப்பித்தனர்.
இன்சூரன்ஸ்...
இவ்வாறு இழப்பீடு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு பணம் மற்றும் வாகனச் செலவுகளை அளித்ததன் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சுமார் ரூ. 5 ஆயிரம் கோடி செலவாகியுள்ளதாம்.
நஷ்டம்...
இது தொடர்பாக இன்சூரன்ஸ் கம்பெனி தலைவர் ஒருவர் கூறுகையில், ‘வெள்ளத்தால் மொத்த இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கும் சேர்த்து சுமார் 5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், தேசிய காப்பீட்டு நிறுவனங்களுக்கு மட்டும் ரூ. 300 கோடி இழப்பு ஆகும்' எனத் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் வெள்ளம்...
என்.ஐ.சி. இயக்குநர் மற்றும் ஜெனரல் மானேஜர் வசந்தா கிருஷ்ணா இது குறித்து கூறுகையில், ‘பெரும்பாலும் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் காப்பீட்டுத் தொகை வழங்குவது ரூ. 80 முதல் 90 கோடிகளுக்கு உள்ளாகவே இருக்கும். ஆனால், நவம்பர் மாத வெள்ளத்தைவிட, டிசம்பர் மாத வெள்ளச் சேதத்தால் எங்களுக்கு ரூ. 500 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது' என்றார்.
ஜெட் விமானங்களும்...
இதனால் இந்தியாவில் கடந்த ஆண்டு தான் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பலத்த நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் மாத வெள்ளத்தில் சிக்கி தனியார் நிறுவத்திற்கு சொந்தமான 8 ஜெட் விமானங்களும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையை புரட்டிப்போட்ட வெள்ளம்...
இன்சூரன்ஸ் நிறுவனத் தகவல்களின்படி, இழப்பீடு பெற்றவர்களின் விபரம் மட்டுமே இந்த ரூ. 5 ஆயிரம் கோடித் தொகை. பலர் உரிய இன்சூரன்ஸ் வசதி இல்லாமல் சேதங்களுக்கு இழப்பீடு கோரவில்லை. மேலும் இழப்பு ரூ. 10,000 என்றால் இன்சூரன்ஸ் நிறுவனம் அதில் பாதியைக் கூட தராது. இதனால் மக்களுக்கு உண்மையிலேயே ஏற்பட்ட சேதம் என்பது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சொல்லும் அளவைப் போல பல நூறு மடங்கு இருக்கும். தமிழக அரசு வீட்டு ரூ. 5,000 தந்து தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது. அதுவும் பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கவில்லை.