சென்னை தி. நகரில் விதிகளை மீறிய கட்டிடங்கள்...விசாரிக்கிறது சென்னை ஐகோர்ட்!
சென்னை தியாகராய நகரில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு ஏற்கிறது.
சென்னை : விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு ஏற்க தலைமை நீதிபதி ஒப்புகொண்டுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் 24 மணி நேரத்தை கடந்து எரிந்து கரிக்கட்டையாக நிற்கும் தி சென்னை சில்க்ஸ் கட்டிடம் 2011ம் ஆண்டே விதிமீறல் புகாருக்கு ஆளானது. இது போன்று தியாகராய நகர், ரெங்கநாதன் தெருக்களில் சீட்டுக்கட்டு போல அடுத்தடுத்து அடுக்கி கட்டப்பட்டுள்ள கட்டங்களை இடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் அப்போதே 2 மாடிக்கு மேல் உள்ள கட்டிடங்கள் 2011ல் இடிக்கப்பட்டன. ஆனால் சென்னை சில்க்ஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கட்டிடத்தை இடிக்க தடை பெற்று கட்டுமானத்தை தொடர்ந்து 7 மாடி அளவிற்கு கட்டப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை முதல் பற்றி எரியும் சென்னை சில்க்ஸ், விதிமீறல் கட்டிடங்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. இந்நிலையில் தியாகராய நகரில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் குறித்த வழக்கு பல மாதங்களாக நிலுவையில் உள்ளதால் அதனை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் டிராஃபிக் ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனைடுத்து இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.