உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் என்னதாங்க சிரமம்? தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் சரமாரி கேள்வி
தமிழகத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏன் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிரமம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை சாடியுள்ளது.
தமிழகத்திலள்ள பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இருந்த பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. அடுத்த நாளே வேட்புமனு தாக்கல் தொடங்கி தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னைஉயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை' என்று கூறி, நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து, அக்டோபர் 4-ல் உத்தரவிட்டார். டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறும், அதுவரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலரை நியமிக்கவும் உத்தரவிட்டார்.

தேர்தல் ஆணையம் அப்பீல்
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, மே 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேர்தல் நடத்தப்படும் தேதியை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர். இந்நிலையில், அதே பெஞ்சில் நடந்த வழக்கு விசாரணையில், தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாணவர்களின் தேர்வுக் காலமான மார்ச், ஏப்ரலில் தேர்தல் நடத்த முடியாது என்பதால் மே 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிப்பது சாத்தியம் அல்ல என்று தெரிவித்தார்

ஐகோர்ட்டு விதித்த கெடு
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கெடு விதித்தனர்.தேர்தலுக்கான நடைமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக தொடங்கி, ஏப்ரல் 14-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் கேள்வி
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஜுலை மாதத்திற்கு முன் உள்ளாட்சி ர்தலை நடத்துவதில் என்ன சிரமம் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட நிலையில், அதை சரிபார்க்க அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தார்.

பிரமாணப்பத்திரம்
வழக்கில் ஆஜரான திமுக தரப்பு வழக்கறிஞர் ஜூலை இறுதியில் தேர்தல் நடத்துவதாக உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 24ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications