கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி: சென்னை ஹைகோர்ட்
சென்னை: கட்டாய ஹெல்மெட் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் என்பவர் கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது,
உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதனால் ஹெல்மெட் அணிந்துக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்ட பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
அந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் முத்துகிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
மனுவை தள்ளுபடிய செய்த அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை இந்த உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது. அப்படி இருந்தும், அதே கோரிக்கையுடன் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
மேலும், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், பின்னால் உட்கார்ந்து பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டமே உள்ளது. அவற்றை எல்லாம் மனதில் வைத்துத்தான், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவில் தவறில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் வழக்கு செலவு விதிக்கிறேன். இந்த தொகையை தமிழ்நாடு சட்ட உதவி மையத்துக்கு அவர் வழங்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.