ஜெயலலிதா சாவில் மர்மம்.. பிரதமர் அலுவலகம், தலைமைச் செயலருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை ஹைகோர்ட் நீதிபதி தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜோசப் ஸ்டாலின் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, ஹைகோர்ட் விடுமுறைக்கால பெஞ்ச் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும், பார்த்திபன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா, மருத்துவமனையில் இருந்தபோது படம், வீடியோ என எதுவுமே வெளியாகாததை சுட்டிக் காட்டி தனக்கும் சந்தேகம் இருப்பதாக நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ள நிலையில் மத்திய அரசு மவுனம் காப்பது ஏன்?. ஏனெனில் ஜெயலலிதா சிகிச்சை விவரம் மத்திய அரசுக்கு முழுமையாக தெரியும். மத்திய அரசுக்கு தெரிந்தும் வாயை திறக்காதது ஏன்? என்ற கேள்வியை, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் எழுப்பினார் நீதிபதி.
இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொண்டு விசாரணை கமிஷன் அமைத்து உண்மையை கொண்டுவர கோரும் மனுதாரரின் கோரிக்கைக்கு பதில் அளிக்குமாறு, பிரதமரின் செயலாளர், உள்துறை செயலாளர், மாநில தலைமைச் செயலாளருக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, ஹைகோர்ட்.
இது விடுமுறைக்கால பெஞ்ச் என்பதால், தொடர்ந்து விசாரிக்க முடியாது என கூறியுள்ள இந்த அமர்வு விசாரணையை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
ஒரு மாநில முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசு அதுகுறித்து தினசரி அறிக்கைகளை பெற்றிருக்கும். எனவே மத்திய அரசின் பாத்திரம் இதில் மிக அதிகம். முதல் முறையாக மத்திய அரசை நோக்கி ஒரு கேள்வி சென்னை ஹைகோர்ட்டிலிருந்து கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications