சென்னை போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை! போலீசாருடன் மோதல்
சென்னை: போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் திடீரென அலுவலகத்தை சூறையாடினர். அங்கு கலவரம் ஏற்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
2013 செப்டம்பரில் 11வது ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. அன்றிலிருந்து 12வது ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் கடந்த ஓராண்டாக ஊழியர்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர். திருச்சியில் கடந்த 2ம்தேதி போக்குவரத்து ஊழியர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது வரும் 19ம்தேதி வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தனர். அது தொடர்பாக 5ம் தேதி அதற்காக மனுவை பொது மேலாளர்களிடம் கொடுத்தனர்.

நேற்று சட்டசபையில் முதல்வர் பன்னீர்செல்வம் கூறுகையில், 'இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. எனவே இடைக்கால நிவாரணமாக மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும்:' என்று அறிவித்தனர். இதற்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் அரசின் தன்னிச்சையான முடிவை கண்டித்து இன்று காலை சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தில் 11 போக்குவரத்து சங்கங்களை சேர்ந்த தொழிற்சங்கத்தினர் ஒன்று திரண்டனர். தங்கள் கோரிக்கைகளை மனுவாக தயாரித்து அதை நிர்வாக இயக்குனருக்கு கொடுக்க முயன்றனர்.

கோஷங்களை எழுப்பிய தொழிற்சங்கத்தினர் திடீரென போக்குவரத்து மேலாளர் அலுவலகம் நோக்கி முன்னேற முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர்.இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாருடன் கைகலப்பிலும் ஈடுபட்டனர். அப்போது ஆக்ரோஷமடைந்த தொழிலாளர்கள் தடுப்புகளை தூக்கி எறிந்தனர். தொடர்ந்து போலீசாரும் மோதலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் ஒருபகுதியினர் அங்கிருந்த காம்பவுண்ட் சுவர் மீது ஏறி குதித்து தலைமை அலுவலகத்துக்குள் புகுந்தனர். அப்போது இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து உள்ளே புகுந்த தொழிலாளர்கள் பொதுமேலாளர்(தொழில்நுட்பம்) முகமது சலீம், வரதராஜன்(இணைஇயக்குனர்) ஆகியோரது அறை முன்பு ஆக்ரோஷ தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் தலைமை அலுவலகமே போர்களம் போல் ஆனது. தொழிலாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
பாதுகாப்பு கருதி போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். உள்ளே புகுந்த தொழிலாளர்கள் வெளியே வர மறுத்து அதிகாரிகளின் அறைகளுக்குள் இருந்து கொண்டு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications